நடிகர் பிரித்விராஜ், கடந்த இரண்டு ஆண்டுகளாக மோகன்லாலை வைத்து இயக்கிய ‘எம்புரான்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் தயாரிப்பு பணிகளில் முழுமையாக ஈடுபட்டிருந்தார். அதே நேரத்தில், தெலுங்கில் ‘சலார்’ மற்றும் ஹிந்தியில் ‘படே மியான் சோட்டே மியான்’ ஆகிய படங்களில் வில்லனாக நடித்திருந்தார். மலையாளத்திலும் பல படங்களை ஏற்காமல், ஏற்கனவே நடித்திருந்த ‘ஆடுஜீவிதம்’ மற்றும் ‘விலாயத் புத்தா’ ஆகிய படங்களை மட்டுமே முடித்தார். இதில், ‘ஆடுஜீவிதம்’ மற்றும் ‘குருவாயூர் அம்பலநடையில்’ திரைப்படங்கள் கடந்த ஆண்டு வெளியானது குறிப்பிடத்தக்கது.
தற்போது ‘எம்புரான்’ படம் முடிந்த நிலையில், மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி ‘நோபடி’ எனும் புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார் பிரித்விராஜ். இந்த படத்தில் நாயகியாக நடிகை பார்வதி நடிக்கிறார். கடந்த 2018ஆம் ஆண்டு, பிரித்விராஜும் பார்வதியும் ‘மை ஸ்டோரி’ மற்றும் ‘கூடே’ எனும் இரண்டு படங்களில் இணைந்து நடித்திருந்தனர். இந்த இரண்டையும் இரண்டு பெண் இயக்குநர்கள், ரோஷினி தினகர் மற்றும் அஞ்சலி மேனன் இயக்கியிருந்தனர்.
இரண்டுமே அப்போது பெரிய வரவேற்பைப் பெறவில்லை. தற்போது ஏழு வருடங்களுக்குப் பிறகு, இவர்கள் இருவரும் மீண்டும் ‘நோபடி’ என்ற படத்திற்காக இணைந்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது தொடங்கியுள்ளது. எர்ணாகுளத்தில் உள்ள வெலிங்டன் தீவில் படத்தின் தொடக்க விழா பூஜை நடைபெற்றது. இப்படத்தை நிசாம் பஷீர் இயக்குகிறார். இவர் 2019-ஆம் ஆண்டு வெளியான மற்றும் நல்ல வரவேற்பைப் பெற்ற ‘கெட்டியோலானு என்டே மாலாக்க’ என்ற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.