தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வருபவர் வித்யாசாகர். இவரை அனைவரும் அன்போடு மெலடி கிங் என அழைத்து வாழ்த்துகின்றனர். 1989ல் வெளியான ‘பூ மனம்’ திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக திரையுலகில் அறிமுகமானார். இதுவரை 225க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
தமிழில் ஜெய் ஹிந்த், தில், பூவெல்லாம் உன் வாசம், தவசி, ரன், வில்லன், தூள், இயற்கை, சந்திரமுகி, கில்லி, மொழி, குருவி போன்ற படங்களுக்கு இசையமைத்து பெரும் வெற்றியை பெற்றவர். மலையாள திரையுலகிலும் அவருக்கு தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. அவருடைய இசையில் வெளியான ‘நிறம்’, ‘தேவதூதன்’, ‘தோஸ்த்’, ‘மீச மாதவன்’, ‘முல்லா’ போன்ற மலையாள படங்கள் மிகப்பெரிய ஹிட்டுகளாகின.
வித்யாசாகர் தற்பொழுது முதல்முறையாக ‘அஷ்ட ஐயப்ப அவதாரம்’ என்ற தெய்வீக பாடல்கள் அடங்கிய ஆல்பத்தை இசையமைத்துள்ளார். இந்த ஆல்பத்தில் முழுக்க முழுக்க ஐயப்பனைப் பற்றிய மலையாள பாடல்கள் இடம் பெற்றுள்ளன. இதற்காக சமீபத்தில் ப்ரோமோ வீடியோ வெளியிடப்பட்டது. இந்த ஆல்பம் விரைவில் சரிகமா சவுத் சிவோஷனல் சேனலில் வெளியாகவுள்ளது.