தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான பவன் கல்யாண், சில வருடங்களுக்கு முன்பு ஜனசேனா என்ற கட்சியை துவங்கி அரசியலில் ஈடுபட்டார். 2019ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் அவர் மற்றும் அவரது கட்சியினர் போட்டியிட்ட நிலையில், வெற்றிபெறவில்லை.

எனினும், 2024ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் பவன் கல்யாண் தலைமையிலான ஜனசேனா, பா.ஜ., தெலுங்கு தேசம் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு, மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. பவன் கல்யாணின் கட்சியினர் முழுமையாக வெற்றி பெற்றனர், மேலும் பவன் கல்யாண் துணை முதல்வராக பதவியேற்றார்.
சட்டசபைத் தேர்தலுக்கு முன்பே, பவன் கல்யாண் திரைப்படங்களில் நடிப்பதை தற்காலிகமாக நிறுத்தி அரசியலில் தீவிரமாக ஈடுபட்டார். அவர் நடித்து வந்த ‘ஓஜி’, ‘ஹரிஹர வீரமல்லு’, ‘உஸ்தாத் பகத் சிங்’ ஆகிய படங்களின் படப்பிடிப்புகள் இடைநிறுத்தப்பட்டன. தற்போது, ‘ஓஜி’ படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது, இதை டிவிவி என்டர்டெயின்மென்ட் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அடுத்த ஆண்டு பவன் கல்யாண் நடித்த படங்கள் ஒன்றின் பின்பு ஒன்றாக திரைக்கு வர உள்ளன.