தெலுங்கு திரை உலகின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான பவன் கல்யாண், கடந்த ஆண்டு ஆந்திர மாநிலத்தில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் வெற்றிபெற்று, அதனைத் தொடர்ந்து மாநிலத்தின் துணை முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். அவர் நடிகராக இருந்தபோதே ‘ஹரிஹர வீர மல்லு’, ‘ஓஜி’, மற்றும் ‘உஸ்தாத் பகத்சிங்’ ஆகிய திரைப்படங்கள் படப்பிடிப்பில் இருந்தன.

அரசு பொறுப்பை ஏற்ற பிறகு, அவர் சில மாதங்கள் சினிமாவில் இருந்து விலகி இருந்தார். ஆனால், தயாரிப்பாளர்களின் நிலைமையை புரிந்துக் கொண்டு, தாமதமாகியிருந்த ‘ஹரிஹர வீர மல்லு’ மற்றும் ‘ஓஜி’ ஆகிய படங்களில் தனது நடிப்பை நிறைவு செய்தார். இதில் ‘ஹரிஹர வீர மல்லு’ திரைப்படம் சமீபத்தில் வெளியானது, அதற்கு பார்வையாளர்களிடம் கலவையான விமர்சனங்கள் கிடைத்தன.
இதனையடுத்து ‘உஸ்தாத் பகத்சிங்’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக நடைபெற்று வந்தது. இந்த படத்தை ஹரிஷ் சங்கர் இயக்குகிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனமே தயாரிப்பை மேற்கொண்டுள்ளது. இசையமைப்பாளராக தேவிஸ்ரீ பிரசாத் பணியாற்றுகிறார். கதாநாயகிகளாக ஸ்ரீலீலா மற்றும் ராஷி கண்ணா இணைந்து நடித்துள்ளனர். தற்போது பவன் கல்யாண், தனது பிஸியான அரசியல் கடமைகளுக்கிடையில், படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளையும் சிறப்பாக நடித்துத் தந்து படத்தின் முழு படப்பிடிப்பையும் முடித்து வைத்துள்ளார் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.