படை தலைவன் – பொள்ளாச்சிக்கு அருகிலுள்ள ஒரு கிராமத்தில், தனது மகன் சண்முக பாண்டியன் மற்றும் மகளுடன் வாழும் கஸ்தூரிராஜா, ஒரு யானையை வளர்த்து வருகிறார். அந்த யானைக்கு சண்முக பாண்டியனிடம் மிகுந்த பாசம் உண்டு. இந்நிலையில், அதே ஊரில் வசிக்கும் லோகு என்ற நபர், கஸ்தூரிராஜா வாங்கிய கடனை காரணமாக வைத்து, அவரை மக்கள் முன்னிலையில் அவமானப்படுத்துகிறார். இதனால் அவமானம் அடைந்த சண்முக பாண்டியன், தனது நண்பர்களின் உதவியுடன் யானையை பயன்படுத்தி பணம் சம்பாதிக்க முயல்கிறார். இதனால் அவர் ஒரு பெரிய பிரச்சனையில் சிக்குகிறார், அதன் விளைவாக அந்த யானை வனத்துறையிடம் அடைக்கலம் பெறுகிறது. அதன் பின் என்ன நடந்தது? சண்முக பாண்டியன் அந்த யானையை மீட்டாரா என்பது தான் படத்தின் மீதமுள்ள கதை.
யானையை மையமாக வைத்து சண்முக பாண்டியனை கொண்டு கதை உருவாக்கிய இயக்குநர் அன்பு, திரைக்கதையில் மேலும் கவனம் செலுத்தி இருக்கலாம். முதல் பாதியில் யானை காணாமல் போனது என்பதைத் தெரிவித்துவிட்டு, மீதமுள்ள நேரம் முழுவதும் அதனைத் தேடும் முயற்சிகள் காட்சிகளாக அமைந்துள்ளன. இந்தப் படத்தில் சண்முக பாண்டியனைத் தவிர, குறிப்பிடத்தக்க வேடங்களில் யாரும் இல்லை. ஒரிசாவில் கதை நடைபெறுவதாக கூறப்பட்டாலும், அதனை பிரதிபலிக்கும் காட்சிகள் எதுவும் இடம்பெறவில்லை என்பது மைனஸ். சண்முக பாண்டியன் அவருக்காக அளிக்கப்பட்ட வேலையை முறையாகச் செய்துள்ளார். அவருடைய உயரம் மற்றும் உடல்வாகு கதைக்கேற்ப பொருந்துகிறது. மேலும், அவரது கண்கள் மற்றும் புருவங்கள் அவரது தந்தை விஜயகாந்தைப் போல் இருப்பதும் படத்திற்கு ஒத்துழைகிறது. இருந்தாலும், உணர்ச்சி பூர்வமான காட்சிகளில் அவர் இன்னும் சிறப்பாக நடித்திருக்கலாம். கதாநாயகியாக நடித்த யாமினி சந்தர் சில காட்சிகளில் மட்டுமே தோன்றுகிறார். இவர்களுக்கிடையே காதல் காட்சிகள், பாடல் காட்சிகள் போன்றவை எதுவும் இடம்பெறவில்லை. இருவரும் இணைந்து தோன்றும் காட்சிகளும் இல்லை என்பதும் கவலையளிக்கிறது.
சண்முக பாண்டியனின் தந்தையாக நடித்துள்ள கஸ்தூரிராஜா, கிராமத்து மூத்தவராக தனது நடிப்பை மிகச் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். தனது மகனை இழக்கும் தருணங்களில் அவரது நடிப்பு உணர்ச்சிவசப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. வில்லனாக நடித்துள்ள கருடன் ராம், வில்லத்தனத்திற்குப் பதிலாக ஹாரர் படங்களில் வரும் சாமியார் போல் தோன்றுகிறார். அவருக்கு துணையாக வரும் ரிஷி மற்றும் லோகு உள்ளிட்ட நடிகர்கள் சில காட்சிகளில் மட்டும் தோன்றுகிறார்கள். வனத்துறை அதிகாரி மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகியோருக்கு முக்கியத்துவம் வாய்ந்த காட்சிகள் வழங்கப்படவில்லை.
இத்துடன் தொழில்நுட்ப மேம்பாடுகளினூடே ‘ரமணா’ படத்தில் நடித்த விஜயகாந்தின் தோற்றத்தை மறுபடியும் உருவாக்கி, யூகி சேதுவுடன் இணைத்து அந்தப் படத்தின் நினைவுகளை மீட்டுள்ளனர். மேலும், விஜயகாந்தின் சூப்பர் ஹிட் பாடலான ‘பொட்டு வச்ச தங்க குடம்’ பாடல் இதில் ஒலிக்கிறது. ஆனால், ரசிகர்கள் அந்தப் பாடலைக் கேட்கும் போது ‘லப்பர் பந்து’ பட காட்சிகள் தான் நினைவுக்கு வருகின்றன. இப்படத்திற்கு இளையராஜா இசை அமைத்துள்ளார் என்பதையும் குறிப்பிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சதீஷ் குமாரின் ஒளிப்பதிவு பாராட்டத்தக்கது. இருப்பினும், காடுகள் மற்றும் யானையைக் கொண்டு இன்னும் வித்தியாசமாக, பிரம்மாண்டமாக காட்சிகளை அமைக்கமுடிந்திருக்குமே என்ற எண்ணம் தோன்றுகிறது. ஆனால் நிச்சயமாக ஒருமுறை இப்படத்தை காணலாம்.