சூர்யா தற்போது இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் தனது 45-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கு தற்காலிகமாக ‘சூர்யா 45’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார்.
சூர்யாவுடன் திரிஷா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அதேபோல் சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி மற்றும் நட்டி நட்ராஜ் ஆகியோரும் இப்படத்தில் நடித்துவருகின்றனர்.
இந்த படத்தில் சூர்யா இரட்டை வேடங்களில் நடிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே அவர் ஒரு வக்கீல் வேடத்தில் நடிக்கிறார் என கூறப்பட்ட நிலையில், தற்போது மற்றொரு வேடமும் இருப்பதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் கதை நீதிமன்ற வழக்கை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. சமீபத்தில் இசையமைப்பாளர் சாய் அபயங்கர், இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜியுடன் இசை பணிகளில் ஈடுபட்டு வரும் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்.
படத்தின் மீது ரசிகர்களிடையே பெரிய அளவில் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்நிலையில், படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது கதை இறுதிக்கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. தற்போது கிளைமாக்ஸ் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.இதனிடையே, இசையமைப்பாளர் சாய் அபயங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘சூர்யா 45’ படத்தின் டீசர் சில நாட்களில் வெளியாகும் என அறிவித்துள்ளார். மேலும், இப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.