மலையாள சினிமாவில் நடிகர் மோகன்லால் இளம் வயதிலிருந்து முதியவர்களுக்கு வரை பரவலான ரசிகர்களைப் பெற்றவர். குறிப்பாக அவரது ‘புலி முருகன்’ படம் திரையரங்குகளில் வெளியான போது, இரண்டு முதல் மூன்று வயதுடைய குழந்தைகள் கூட அந்த கதாபாத்திரத்தின் தோற்றத்தில் கெட்டப்பில் வீடியோக்களை உருவாக்கி சமூக வலைதளங்களில் பதிவிட்டு வைரலாக்கினார்கள்.

இந்த நிலையில், கேரளாவைச் சேர்ந்த 96 வயதுடைய ராகவன் நாயர் என்பவர், தாம் மோகன்லாலின் தீவிர ரசிகர் எனவும், அவரை ஒருமுறையாவது நேரில் சந்திக்க வேண்டும் எனும் ஆசையுடன் சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோ மிகப்பெரிய அளவில் பரவியது. அது மோகன்லாலின் கவனத்துக்கும் சென்றது.
இதையடுத்து, “அன்புள்ள ராகவன் சேட்டா, உங்கள் வீடியோவை நான் பார்த்தேன். என்னை நீங்கள் நேசிக்கும் விதமும், என் படங்களை ரசித்து பார்ப்பதையும் அறிந்து எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. உங்களுக்கு என் அன்பும் நன்றியும். நிச்சயமாக ஒரு நாள் சந்திக்கும் வாய்ப்பு அமையும்போது சந்திப்பேன்” என்று அவர் பதில் அளித்திருந்தார். அதனைத் தொடர்ந்து, எந்த விளம்பரமோ, அறிவிப்போ இல்லாமல் மோகன்லால் அந்த வயதான ரசிகரை நேரில் சந்தித்து அவரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். அந்த சந்திப்பு குறித்து அந்த ரசிகர் தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். 96 வயதில் மோகன்லாலின் ரசிகராக இருந்து, தனது ஆசையை அவர் நிறைவேற்றிய இந்த நிகழ்வு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.