நடிகை நயன்தாரா நடித்த ‘அறம்’ திரைப்படத்தை இயக்கியவர் கோபி நயினார். தற்போது அவர் இயக்கியுள்ள திரைப்படம் ‘மனுஷி’. இந்த படத்தை இயக்குநர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் நிறுவனம் தயாரித்துள்ளது. இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். இதில் நாசர், தமிழ், ஹக்கிம் ஷா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பயங்கரவாதி என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படும் ஒரு இளம் பெண் காவல் நிலையத்தில் அடையும் துன்புறுத்தல்களை மையமாகக் கொண்டு இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தப் படம் அரசுகளை, குறிப்பாக காவல் துறையை தவறாக சித்தரிக்கிறது என்று கூறி, சென்சார் குழு இந்தப் படத்திற்கு சான்றிதழ் வழங்க மறுத்தது.இதற்கு எதிராக தயாரிப்பாளர் வெற்றிமாறன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, “படத்திற்கு சான்றிதழ் வழங்க மறுத்த உத்தரவில், எந்த காட்சிகள் மற்றும் வசனங்கள் ஆட்சேபனைக்குரியவையாக உள்ளன என்பதை குறிப்பிடவில்லை” என்று வெற்றிமாறன் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. இதற்கு பதிலளித்த தணிக்கை குழு, “நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு எதிரானவையாகவும், அரசு கொள்கைகளை அவதூறாக காட்டும் வகையிலும், நாட்டின் நலனுக்கு மாறானவையாகவும் உள்ள காட்சிகளை நீக்கினால், சான்றிதழ் வழங்குவது பற்றி பரிசீலிக்கப்படும்” என தெரிவித்தது.
இருபுற வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், “ஆட்சேபனைக்குரிய காட்சிகள் மற்றும் வசனங்களை தயாரிப்பாளருக்கு தெளிவாகக் கூற வேண்டும்; அதற்குப் பிறகு தயாரிப்பாளர் அவற்றை ஏற்க வேண்டியுள்ளது. எந்தவொரு விபரமும் கூறப்படாத நிலையில் அந்த காட்சிகளை எப்படித் திருத்த முடியும்? எனவே, தணிக்கை குழு படம் பார்த்த பிறகு அந்த ஆட்சேபனைக்குரிய பகுதிகளை தயாரிப்பாளரிடம் தெளிவாக சுட்டிக்காட்ட வேண்டும்” என்று உத்தரவிட்டு, விசாரணையை வரும் 11ம் தேதிக்கு ஒத்திவைத்தது.