மலையாளத் திரையுலகில் கடந்த 45 ஆண்டுகளாக வெற்றிகரமாக பயணித்து வருகிறார். நடிகர் மோகன்லால். இந்திய ராணுவத்தின் பெருமையை வெளிப்படுத்தும் பல படங்களில் நடித்ததற்காக, அவருக்கு இந்திய இராணுவத்தினால் கவுரவ லெப்டினன்ட் பதவி வழங்கப்பட்டது. இதனுடன், அவரது வாழ்நாள் சாதனைகள் மற்றும் இந்திய திரைப்படத் துறைக்கு அளித்த பெரும் பங்களிப்பை மதிக்கும் வகையில், நாட்டின் மிக உயரிய திரைப்பட விருதான ‘தாதா சாகேப் பால்கே’ விருது மோகன்லாலுக்கு வழங்கப்பட்டது. சமீபத்தில் நடைபெற்ற சிறப்பு விழாவில், ஜனாதிபதியால் அந்த விருது அவரிடம் வழங்கப்பட்டது.

இந்த பெருமைக்குரிய தருணத்தை முன்னிட்டு, கேரள மாநில அரசு ‘லால் சலாம்’ எனும் பெயரில் மோகன்லாலுக்காக ஒரு பிரமாண்டமான விழாவை நடத்தியது.
சமீபத்தில் நேற்று நடைபெற்ற இந்த நிகழ்வில், கேரள முதல்வர் பினராயி விஜயன், பல்வேறு அமைச்சர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டு மோகன்லாலுக்கு பாராட்டு தெரிவித்தனர். இவ்விழாவின் மூலம் தன்னை சிறப்பாக கௌரவித்த கேரள அரசு, முதல்வர், அமைச்சர்கள் மற்றும் கலந்து கொண்ட அனைவருக்கும் மோகன்லால் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார்.