கன்னட மொழி குறித்து நடிகர் கமல்ஹாசன் தெரிவித்த கருத்தால் கர்நாடகாவில் தக் லைப் படத்தை திரையிட மாட்டோம் என அம்மாநில திரைப்பட வர்த்தக சபை தெரிவித்தது. இதனிடையே கோர்ட் மூலம் படத்தை வெளியிட கர்நாடகா ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார் கமல். ஆனால் கமலுக்கு எதிராக நீதிமன்றம் அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டதோடு முறையான பதிலளிக்க உத்தரவிட்டது.

இப்பிரச்னை தொடர்பாக கர்நாடகா வர்த்தக சபைக்கு நேற்று கமல் ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில், ‛‛தக் லைப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அன்பின் மிகுதியால் நான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது மிகுந்த வேதனை அளிக்கிறது. நாம் அனைவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள். கன்னட மொழியை ஒருபோதும் குறைத்து மதிப்பிடவில்லை.
தமிழைப் போலவே, கன்னடமும் ஒரு பெருமைமிக்க இலக்கிய மற்றும் பண்பாட்டு பாரம்பரியத்தைக் கொண்டது. அதை நான் எப்போதும் பாராட்டியே வந்திருக்கிறேன். எனக்கு மொழியால் அன்பு உண்டு. எனக்கு மொழிகள் உடனான பிணைப்பு ஆழமானது. எந்த மொழியையும் தாழ்த்தி பார்க்கும் எண்ணம் இல்லை. எனது பேச்சு அனைவரையும் ஒருங்கிணைக்கவும், அன்பையும் ஒற்றுமையையும் நிலைநாட்டவும் மட்டுமே இருந்தது.
திரைப்படம் மக்களிடையே ஒரு பாலமாக இருக்க வேண்டும், பிரிக்கும் சுவராக இருக்கக் கூடாது. இதுவே எனது பேச்சின் உண்மையான நோக்கம். பொது அமைதியின்மை மற்றும் பகைமைக்கு எந்த இடத்தையும் நான் ஒருபோதும் அளிக்க விரும்பவில்லை. இந்த தவறான புரிதல் தற்காலிகமானது. நமது பரஸ்பர அன்பையும் மரியாதையையும் மீண்டும் உறுதிப்படுத்துவதற்கு ஒரு வாய்ப்பாக இருக்கும் என்றும் உறுதியாக நம்புகிறேன். இவ்வாறு கமல் தெரிவித்துள்ளார்.