Friday, April 12, 2024

திருத்தம் சொல்லப் போய் கோபித்துக் கொண்டு வெளியேறிய ஜேசுதாஸ்..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஒரு பாடலின் ஒலிப்பதிவின்போது திருத்தம் செய்ய போனபோது திடீரென்று ஜேசுதாஸ் கோபமடைந்து ஸ்டூடியோவைவிட்டு வெளியேறிய சம்பவத்தை நினைவு கூர்கிறார் கவிஞர் பிறைசூடன்.

“1991-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘கோபுர வாசலிலே’. இந்தப் படத்தில் இடம் பெறும் ‘நாதம் எழுந்ததடி கண்ணம்மா’ என்ற பாடலை நான்தான் எழுதினேன்.

இந்தப் பாடலுக்கான கம்போஸிங் முடிந்து பாடல் ரிக்கார்டிங் நடைபெற்றபோது இதைப் பாடுவதற்காக கே.ஜே.ஜேசுதாஸ் ஸ்டூடியோவுக்கு வந்தார். அவர் வரும்போதே ஏதோ சரியில்லாத தோரணையில்தான் இருந்தார். ஏதோ மன வருத்தம் இருப்பதுபோல காணப்பட்டார்.

பாட வேண்டிய அறைக்குள் அவர் நுழைந்ததும் நான் பாடலை அவரிடத்தில் கொடுத்தேன். அதனை அவர் தன் டைரியில் எழுதிக் கொண்டார். பின்பு அவர் பாட தயாரானபோது இளையராஜா என்னை அழைப்பதாக ஒருவர் வந்து சொன்னார்.

நான் அந்த அறையில் இருந்து வெளியேறி இளையராஜாவை பார்க்க வந்தேன். ஜேசுதாஸ் பாடப் போகும் வரிகளில் அவர் ஒரு திருத்தம் சொன்னார். அதை ஜேசுதாஸிடம் சொல்லி பாட வைக்கும்படி என்னிடம் சொன்னார் இளையராஜா.

நான் மறுபடியும் ஜேசுதாஸ் இருந்த அறைக் கதவைத் திறந்து உள்ளே சென்றேன். நான் வந்ததைப் பார்த்ததும் ஜேசுதாஸ் என்ன நினைத்தாரோ தெரியவில்லை திடீர் கோபத்துடன், “இப்போ இந்த ரூம்ல ஒண்ணு நான் இருக்கணும்.. இல்லை நீங்க இருக்கணும்.. யார் இருக்குறது..?” என்றார்.

எனக்கு ஒண்ணும் புரியலை. நான் ஒரு திருத்தம் சொல்லத்தான் வந்தேன். அதுலேயும் என்னை அனுப்பி வைச்சது இளையராஜாதான். இதில் என் தப்பு ஒண்ணும் இல்லையேன்னு எனக்கும் லைட்டா கோபம் வந்து.. “நான்தான் இந்த ரூம்ல இருக்கணும்”ன்னு சொல்லிட்டேன்.

இதைக் கேட்டவுடனேயே ஜேசுதாஸ் பட்டுன்னு டைரியை எடுத்திட்டு ரூமைவிட்டு வெளில போனவர் கார்ல ஏறி வீட்டுக்கே போயிட்டார். இதுல என் தவறு எதுவும் இல்லையேன்னுட்டு இளையராஜாகிட்ட நடந்ததை அப்படியே சொன்னேன். “சரி விடுங்க…” என்றார் இளையராஜா.

2 நாட்கள் கழித்து ஜேசுதாஸ் அதே பாடலைப் பாடுவதற்காக மீண்டும் ஸ்டூடியோவுக்கு வந்தார். இந்த முறை நல்ல மூடில் வந்தவர் என்னிடம், “ஸாரிங்க.. அன்னிக்கு என் வீட்ல ஒரு பிரச்சினை. அந்தப் பிரச்சினையைப் பத்தியே யோசிச்சிட்டிருந்தேன். அதான் கொஞ்சம் மூட் அவுட்ல அப்படி பேசிட்டேன்..” என்றார்.

சிறந்த கலைஞர்களும் இது போன்ற சிக்கல்களில் மாட்டிக் கொள்வது உண்டு..” என்று சொல்லியிருக்கிறார் கவிஞர் பிறைசூடன்.

- Advertisement -

Read more

Local News