நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், அமெரிக்காவில் சினிமா தொடர்பான படிப்பை முடித்து, கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமாக உள்ளார். ஏற்கனவே ஒரு குறும்படத்தை இயக்கியுள்ள ஜேசன், அதை தொடர்ந்து லைகா நிறுவனத்தில் ஒரு கதையை கூறி, அதில் நடிக்க பல நடிகர்களிடம் கதையை விவரித்தார். இறுதியாக, சந்தீப் கிஷனிடம் கூறி ஒப்புதல் பெற்றார். இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் உருவாகிறது.
இந்தப் படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், படப்பிடிப்பு பற்றிய தகவல்கள் வெளிவராததால் படம் கைவிடப்பட்டது என்ற செய்திகள் பரவின. ஆனால் தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், நடிகர் சந்தீப் கிஷன் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்தார். அப்போது வெளியில் வந்த அவரிடம், “விஜய் மகன் படத்தில் நடிக்கிறீர்களே, படப்பிடிப்பு தொடங்கி விட்டதா?” என்று செய்தியாளர் ஒருவர் கேட்டார். அதற்கு சந்தீப், “விஜய் மகன் என்று சொல்லாதீர்கள், ஜேசன் சஞ்சய் என்று அவரின் பெயரை பயன்படுத்துங்கள். இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது ஒரு சிறந்த படமாக உருவாகும் என்று நம்புகிறேன்” என பதிலளித்தார்.