வர்மா மற்றும் மகான் திரைப்படங்களைத் தொடர்ந்து தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள பைசன் என்ற புதிய திரைப்படத்தில் நடிகர் துருவ் விக்ரம் நடித்துள்ளார். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அடுத்ததாக துருவ் விக்ரம், பிரபல இயக்குநர் மணிரத்னம் இயக்கும் புதிய திரைப்படத்தில் நடிக்கவுள்ளார் என்ற தகவல்கள் முன்னதாக வெளியாகின. இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை ருக்மணி வசந்த் நடிக்கிறார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
தக்லைப் திரைப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்றபோது, இளைய நடிகர்களை வைத்து காதல் பின்னணியிலான ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக முன்பே தெரிவித்திருந்த இயக்குநர் மணிரத்னம், தற்போது அந்தப் புதிய திரைப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகளை தொடங்கி உள்ளார். இந்தப் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் செப்டம்பர் மாதம் முதல் நடைபெறவிருக்கிறது என கூறப்படுகிறது.