2024-ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற “பேச்சி” திரைப்படத்தைத் தயாரித்த வெர்சஸ் புரொடெக்ஷன்ஸ் நிறுவனம், தற்போது புதிய ஒரு திரைப்படத்தை தயாரிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் நடிகர் கவுதம் ராம் கார்த்திக், காவல் துறை அதிகாரியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது. விஞ்ஞானத் தளத்தில் அமைந்த கிரைம் திரில்லர் கதையை மையமாகக் கொண்டு இந்த திரைப்படம் உருவாகி வருகிறது.

இப்படத்தை இயக்கும் அறிமுக இயக்குநர் சூரியபிரதாப், ஏற்கனவே ‘நாளைய இயக்குநர் – 1’ நிகழ்ச்சியில் போட்டியாளராகப் பங்கேற்றவர் என கூறப்படுகிறது. படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு சென்னையில் நடைபெறும் எனத் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், முக்கிய கதாப்பாத்திரங்களுக்கு நடிப்பவர்கள் தேர்வு செய்யும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இப்படத்தில் தொழில்நுட்பக் குழுவாக ஒளிப்பதிவாளராக அர்ஜுன் ராஜா, தொகுப்பாளராக ஜான் ஆப்ரஹம், இசையமைப்பாளராக விதுஷணன், கலை வடிவமைப்பாளராக பாவ்னா கோவர்தன் மற்றும் சண்டைப் பயிற்சியாளராக மிராக்கல் மைக்கல் ஆகியோர் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.