தெலுங்கு திரைப்படத்துறையின் பிரபல இயக்குனரான கோபிசந்த் மாலினேனி இயக்க உள்ள புதிய படத்தில், நடிகர் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கவிருக்கிறார். மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தில் கதாநாயகனுக்கு இணையாக வலுவான கதாநாயகி தேவைப்படுவதாகக் கருதி, நயன்தாராவை தேர்வு செய்துள்ளனர். தற்போது 65 வயதான பாலகிருஷ்ணாவுடன் நடிக்க நயன்தாரா எந்த வித தயக்கமும் காட்டாமல் உடனடியாக சம்மதித்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக ‘சிம்ஹா’, ‘ஜெய் சிம்ஹா’, ‘ராமராஜ்ஜியம்’ போன்ற பல படங்களில் பாலகிருஷ்ணா ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். குறிப்பாக அவர் சீதையாக நடித்த ‘ராமராஜ்ஜியம்’ திரைப்படம் அவருக்கு பெரும் பாராட்டுகளையும் நல்ல பெயரையும் பெற்றுத்தந்தது. தமிழ்த் திரைப்படங்களில் நயன்தாராவை ஜோடியாக எடுக்க முனைப்பு காட்டும் முன்னணி நடிகர்கள் தற்போது இல்லாத நிலையில், பெரும்பாலும் கதையின் மையமாகவே அவர் நடித்துவருகிறார். இதனால் சமீபகாலமாக தெலுங்கு திரைப்படங்களில் நயன்தாரா தனது கவனத்தை செலுத்தி வருகிறார். தற்போது சீரஞ்சீவியுடன் ஒரு படத்தில் நடித்து வரும் அவர், அதன் பிறகு பாலகிருஷ்ணாவுடன் இணைந்து நடிக்கவிருக்கிறார்.
தமிழில் அவர் நடித்த சில படங்கள் வெளியீட்டுக்காக காத்திருக்கின்றன. அவற்றில் ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படத்தின் மீது அவர் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.

