நடிகர் அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யா திருமணத்திற்குப் பிந்தை தற்பொழுது தெலுங்குத் திரைப்படமான ‘சீதா பயணம்’ படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்தப் படத்தை அவரது தந்தையான அர்ஜுனே எழுதி இயக்கியுள்ளார். இப்படத்தில் கதாநாயகனாக நிரஞ்சன் சுதீந்திரா நடித்துள்ளார்.

இத்திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக ‘புஷ்பா 2’ புகழ் தெலுங்குத் திரைப்பட இயக்குநர் சுகுமார் மற்றும் பிரபல கன்னட நடிகர் மற்றும் இயக்குநராக உள்ள உபேந்திரா கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய சுகுமார், உபேந்திராவை புகழ்ந்து பேசினார்.
உபேந்திராவைப் பற்றி அவர் கூறுகையில், சினிமாவை ஆர்வத்துடனும் ஆழ்ந்த செறிவுடனும் அணுகும் இயக்குநராக உபேந்திராவை நான் ஒருபோதும் மறக்கமுடியாது. அவர் இயக்கிய ‘ஓம்’, ‘ஏ’, மற்றும் ‘உபேந்திரா’ போன்ற படங்கள் எனக்குள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின. உண்மையாகச் சொல்கிறேன், அந்த படங்களை நான் தான் இயக்கியிருந்தேன் என்றால் சந்தோஷமாக ஓய்வெடுத்திருப்பேன். அந்த அளவிற்கு அந்த படங்கள் சினிமாவின் அடையாளங்களாக திகழ்கின்றன.அதுமட்டுமன்றி, சமீப காலங்களில் நான் இயக்கிய படங்களில் கதையை சொல்லும் விதத்தில் நீங்கள் கூர்ந்து கவனித்தால், அதில் உள்ள புத்திசாலித்தனமான முறைமை உபேந்திரா படங்களில் இருந்து வந்துள்ள ஊக்கத்தின் விளைவாகும். நான் மட்டும் அல்ல, ஒவ்வொரு இயக்குநரும் அவரிடமிருந்து இப்படி ஏதாவது எடுத்துக் கொள்ள முடியும்,” எனக் கூறினார் சுகுமார்.