தமிழில் ‘ரோஜா’, ‘ஜென்டில்மேன்’ போன்ற திரைப்படங்களின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் மறக்க முடியாத இடத்தை பிடித்தவர் நடிகை மதுபாலா. தென்னிந்தியத் திரையுலகைத் தாண்டி, இந்தி திரையுலகிலும் பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.

திருமணத்துக்குப் பிறகு, சில ஆண்டுகளாக சினிமாவிலிருந்து விலகி இருந்த நிலையில் தற்போது மீண்டும் திரையுலகுக்கு திரும்பி உள்ளார். விஷ்ணு மஞ்சு நடித்துள்ள ‘கண்ணப்பா’ படத்தில் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற ஒரு பேட்டியில் மதுபாலா, நான் பாரம்பரிய குடும்பத்தில் வளர்ந்தவள். நெருக்கமான காட்சிகளில் நடிப்பது எனக்கு சிக்கலான விஷயமாக இருந்தது. அதனால் பல வாய்ப்புகளை நிராகரிக்க வேண்டி வந்தது.
“ஒரு படம் நடிப்பில் எனக்கு முன்னறிவிக்காமல் ஒரு முத்தக் காட்சியில் நடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அது உதடு முத்தக் காட்சி என்பதால், படக்குழுவினர் நீண்ட நேரம் எனக்குப் புரியவைக்கும் விதமாக விளக்கிக் கூறினர். அந்த காட்சியை ஏற்க வேண்டிய சூழ்நிலையே ஏற்பட்டது. எனக்கு அது மிகவும் மனதை வலியுறுத்தும் அனுபவமாக இருந்தது. ஆனால், எடிட்டிங் செய்யப்பட்ட படத்தைப் பார்த்தபோது, அந்த முத்தக் காட்சி தேவையில்லை என உணர்ந்த படக்குழு அதை நீக்கி விட்டது. இன்றைய 22 மற்றும் 24 வயதிலுள்ள நடிகைகள் மிகவும் புத்திசாலிகளாக இருக்கிறார்கள். ஆனால் நான் 22 வயதில் மிகவும் வெள்ளந்தியாக இருந்தேன். அதனால்தான் சில விஷயங்களில் சரியான முடிவுகளை எடுக்க முடியவில்லை என அவர் தெரிவித்தார்.