தமிழ் சினிமாவின் மிகசிறந்த இயக்குனர்களில் ஒருவரானஇயக்குனர் ராம் இயக்கியுள்ள திரைப்படம் ‘பறந்து போ’. இதில் மிர்ச்சி சிவா, கிரேஸ் ஆண்டனி, மாஸ்டர் மிதுன் ரியான், அஞ்சலி, அஜு வர்கீஸ், விஜய் யேசுதாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இசையமைப்பாளராக சந்தோஷ் தயாநிதி பணியாற்றியுள்ளார்.

‘பறந்து போ’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. விழாவில் படக்குழுவினருடன் இயக்குனர்கள் மிஷ்கின், மாரி செல்வராஜ், ரஞ்சித் ஜெயக்கொடி, மீரா கதிரவன், நடிகர் சித்தார்த், தயாரிப்பாளர்கள் எஸ். தாணு, சுரேஷ் காமாட்சி, அருண் விஸ்வா மற்றும் மாரி செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவில் இயக்குனர் மிஷ்கின் உரையாற்றிய போது கூறியதாவது: “ஒரு நாளைக்கு விழாவுக்கு வரும்படி என்னை அழைக்கும் போன்கள் நிறைய வருகிறது. இப்படி விழாக்களுக்கு என்னை அழைக்கவேண்டும் என்றால், இனிமேல் குறைந்தபட்சமாக 5 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும். அந்த தொகை என் மகளின் முதுகலை கல்விக்கு உதவும், அல்லது வேறுவிதமாக பயனளிக்கும். இப்போது விமர்சனங்கள் பற்றி அதிகமாக பேசப்படுகிறது. ஒரு நல்ல படத்தை நாம் ஆதரிக்க வேண்டும். பிடிக்கவில்லை என்றால் விமர்சிக்கலாம். நானே நான்கு நாட்களாக தூங்கவில்லை. என்னிடம் நிறைய வேலை இருக்கிறது. தற்போது நிறைய படிக்கத் தொடங்கியிருக்கிறேன். சினிமாவுக்கு வருவதற்குப் பிறகு பல தொழில்களில் அனுபவம் பெற்றேன். ‘பிசாசு-2’ மற்றும் ‘டிரெயின்’ படங்களுக்குப் பிறகு, மிஷ்கின் இருந்த இடமே தெரியாமல் போய்விடுவார் என்று சிலர் கூறுகிறார்கள்.
நான் விரைவில் சினிமாவை விட்டு விலகவேண்டும் என்று நினைக்கிறேன். இப்போது சினிமா எனக்கு மகிழ்ச்சிகரமாக இல்லை. சந்தோஷமாக படங்கள் எடுத்த காலம் கடந்துவிட்டது. தற்போது மிகுந்த போட்டி உள்ளது. ரத்தம் சொட்டும் நிலையில் தான் சினிமாவில் இருப்பது போல் இருக்கிறது. இயக்குனர் ராம் படங்களைப் பார்ப்பது எப்போதும் ஒரு அதிசயமாகவே இருக்கும். ‘பறந்து போ’ படமும் நிச்சயமாக குடும்ப ரசிகர்களை ஈர்க்கும் வகையில் உருவாகியுள்ளது. இது ஒரு அழகான படம்,” என அவர் தெரிவித்தார்.