ஆசியாவின் மிகப்பெரிய திரைப்பட நகரமாக உள்ள ஹைதராபாத்தின் ராமோஜி ராவ் பிலிம் சிட்டி, தென்னிந்திய திரைப்படங்கள் மற்றும் பாலிவுட் படங்களின் முக்கிய படப்பிடிப்பு தளமாகவும் அறியப்படுகிறது. இந்நிலையில், பாலிவுட் நடிகை கஜோல், இந்த பிலிம் சிட்டி குறித்து “அது மிகவும் அமானுஷ்யமான இடம்” என்று கூறியிருப்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அவர் நடித்து விரைவில் வெளிவரவுள்ள ‘மா’ திரைப்படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் இதைப் பற்றி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது, “நான் படப்பிடிப்புக்காக எப்போதும் வசதியாக உணர முடியாத இடங்களிலும் இருந்துள்ளேன். அந்த இடங்களில் எனக்குத் தூங்க இயலவில்லை. அப்படிப்பட்ட இடங்களில் ராமோஜி பிலிம் சிட்டி மிகவும் அமானுஷ்யமாக இருக்கிறது என எனக்கு உணர்ந்தது. அங்கு நான் நேரடியாக எந்தவொரு அமானுஷ்ய உருவத்தையும் பார்த்தது இல்லை என்றாலும், அந்த இடத்தில் அப்படி ஒரு உணர்வு ஏற்பட்டது” என தெரிவித்தார்.
அவருடைய இந்தக் கருத்துக்கு தெலுங்கு திரையுலகில் கடும் எதிர்ப்புகள் எழுந்தன. பாலிவுட் துறையிலும் சிலர் இதை பெரிதாக ஏற்கவில்லை. இதனால், தனது கருத்துகள் எதிர்மறையாகப் புரிந்து கொள்ளப்பட்டதைத் தெளிவுபடுத்தும் வகையில், கஜோல் தனது சமூக வலைதளத்தில் விளக்கம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “நான் ராமோஜி பிலிம் சிட்டியைப் பற்றி பேசியது ‘மா’ படத்தின் ப்ரமோஷனுக்காகத்தான். நான் அங்கே பலமுறை படப்பிடிப்புக்காக இருந்துள்ளேன். எப்போதும் அது ஒரு சிறந்த சூழல் கொண்ட இடமாகவே இருந்தது. படம் எடுக்க எளிதான இடம் மட்டுமல்லாமல், சுற்றுலா பயணிகளும் மகிழ்ச்சியாக பொழுதை கழிக்கும் ஒரு இடமாகவும் இருக்கிறது. அதுமட்டுமல்ல, குடும்பங்களுக்கும் குழந்தைகளுக்கும் பாதுகாப்பான இடம் என்றே நான் கருதுகிறேன்” என்று கூறியுள்ளார்.