பொதுவாக நடிகர், நடிகைகள் கதைக்கு ஏற்ப சில காட்சிகளில் பிணமாக நடிப்பது வழக்கம். ஆனால், முழு திரைப்படத்திலும் முழுமையாக பிணமாக நடிப்பது மிகவும் அபூர்வம். ‘மகளிர் மட்டும்’ படத்தில் நாகேஷ், ‘ஏலே’ படத்தில் சமுத்திரகனி, சமீபத்தில் வெளியான ‘ஜாலியோ ஜிம்கானா’ படத்தில் பிரபுதேவா ஆகியோர் பிணமாக நடித்திருந்தனர்.
ஆனால், ஒரு நடிகை அதிகமான காட்சிகளில் முழு திரைப்படத்திலும் பிணமாக நடித்திருப்பது வருகிற 7ஆம் தேதி வெளியானிருக்கிற ‘எமகாதகி’ படத்தில் ரூபா கொடுவாயூர் தான். ஆந்திராவைச் சேர்ந்த இவர், தனது முதல் தெலுங்கு திரைப்படமான ‘உமா மகேஸ்வரா உக்ர ரூபசயா’ படத்திற்காக சிறந்த அறிமுக நடிகைக்கான விருதை பெற்றவர். அதன் பிறகு, ‘மிஸ்டர் பிரகனன்ட்’ என்ற படத்தில் நடித்தார். தற்போது, ‘எமகாதகி’ படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறையில் அறிமுகமாகிறார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: “இந்த படத்தின் படப்பிடிப்பு 40 நாட்கள் நடைபெற்றது. இதில், நான் 20 நாட்கள் முழுவதும் பிணமாக நடித்தேன். இயக்குனர் கதையை சொன்னவுடன், உடனே ஒப்புக்கொண்டேன். காரணம், இது வெறும் பிணம் பற்றிய கதையல்ல… அதன் பின்னால் ஒரு பெரிய போராட்டம் உள்ளது. இதில் நான்ஒரு பிணமாக மட்டும் நடிக்கவில்லை; எனது கதாபாத்திரத்திற்கு காதல் உள்ளது, அதற்கு தொடர்பான மோதல்களும் உள்ளன. வாழ்க்கையில் சில லட்சியங்கள் உள்ளன, மேலும் கொடுமைகளுக்கு எதிராக துணிந்து நிற்கும் சக்தியும்கூட இருக்கிறது. இந்த படம் தமிழ்த் திரையுலகில் எனக்கு நல்ல இடத்தை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன்,” என கூறினார்.