தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா, தற்போது இயக்குனர் ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில், ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் ‘கருப்பு’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்துக்கு இசையமைத்தவர் சாய் அபயங்கர். கதாநாயகியாக திரிஷா நடித்துள்ளார். மேலும் சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி மற்றும் நட்டி நட்ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், பின்னணி தொழில்நுட்ப பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் வகையில் தயாராகி வருகிறது.தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ‘கருப்பு’ படத்தின் முதல் பாடலான ‘காட் மோட்’ (God Mode) வெளியிடப்பட்டு ரசிகர்களிடையே சிறந்த வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து, ‘கருப்பு’ திரைப்படத்தின் இயக்குனர் ஆர்.ஜே. பாலாஜி, இன்று திருச்செந்தூரில் உள்ள முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “கருப்பு திரைப்படத்தின் பணிகள் தற்போது 75 சதவீதம் நிறைவடைந்துள்ளன. படத்தை முடித்து விரைவில் வெளியிடும் முயற்சியில் இருக்கிறோம்” என தெரிவித்தார்.மேலும், திருச்செந்தூரில் சாமி தரிசனம் மிகவும் மகிழ்ச்சியாகவும் மனநிறைவாகவும் அமைந்தது என்றும், ‘கருப்பு’ திரைப்படம் சிறப்பாக அமைய வேண்டி முருகனிடம் வேண்டிக்கொண்டதாகவும் கூறினார்.
மூக்குத்தி அம்மன் 2’ குறித்து எழுந்த கேள்விக்கு பதிலளித்த அவர், “அந்த படத்தை இயக்குனர் சுந்தர்.சி இயக்குகிறார். அந்த படத்திற்கும் எனக்கும் எந்த வகையிலும் தொடர்பு இல்லை. படம் வெற்றி பெற அந்த படக்குழுவினருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்” என தெரிவித்தார்.

