தமிழ் திரைப்பட உலகில் முன்னணி இயக்குநராக விளங்கும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த ‘ரெட்ரோ’ திரைப்படம் கடந்த 1ம் தேதி வெளியானது. இதில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்திருக்கிறார். மேலும், ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், கருணாகரன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ரூ.70 கோடிக்கும் மேற்பட்ட வசூலை இந்த படம் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், “ஆயிரம் கோடி பட்ஜெட்டில் ஒரு படத்தை இயக்கவேண்டும் என்றால், அதில் அதிகமான கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்படும். அப்படியான படங்களை பெரும்பாலும் கிரீன் ஸ்கிரீன் மீது எடுக்கவேண்டும். எனக்கு அதுபோன்ற சூழலில் படம் எடுப்பது பிடிக்கவில்லை. உண்மையான சூழ்நிலையில், மனிதர்களுக்கு நடுவே, உண்மை உணர்வுகள் அடங்கிய கதைகளை எடுத்திட விரும்புகிறேன். அந்த ஆயிரம் கோடியில் நிச்சயமாக 20 அல்லது 30 சிறந்த படங்களை இயக்கமுடியும்” என தெரிவித்தார்.
கார்த்திக் சுப்புராஜ் பல கமர்ஷியல் திரைப்படங்களை இயக்கியிருக்கவும், அவற்றில் உண்மைத்தன்மையை பிரதிபலிக்கக் கூடிய சிந்தனையை கொண்ட இயக்குநராகவே திகழ்கிறார். ‘இறைவி’, ‘ஜிகர்தண்டா’, ‘மெர்க்குரி’ போன்ற படங்கள் அவரது திறமையை வெளிப்படுத்தும் முக்கிய படங்களாகும். இதுவரை 9 படங்களை இயக்கியிருக்கும் இவர், இன்று தமிழின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக மாறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.