மலையாளத் திரைப்பட உலகின் பிரபல நடிகையான அர்ஷா சாந்தினி பைஜு சமீபத்தில் வெளியான ‘ஹவுஸ் மேட்ஸ்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அந்தப் படத்தில் அவரது கதாபாத்திரம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில், தமிழ் சினிமா அனுபவம் குறித்து அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:

மலையாளத்தில் பல படங்களில் நடித்திருந்தாலும், தமிழ் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையோடு காத்துக்கொண்டிருந்தேன். அந்த ஆசை ‘ஹவுஸ் மேட்ஸ்’ படத்தின் மூலம் நிறைவேறியது. திறமைக்கு மதிப்பளிக்கும் மக்கள் தமிழ்நாட்டில் உள்ளார்கள். நிச்சயம் தமிழ் சினிமாவில் எனக்கான இடத்தை பிடிப்பேன் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.
மலையாள சினிமாவுக்கும் தமிழ் சினிமாவுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. ஆனால் தமிழ் சினிமா மிகப் பெரிய துறை; இங்கு மிகப் பெரிய படங்கள் தயாரிக்கப்படுகின்றன. நயன்தாரா உள்ளிட்ட பல நடிகைகள், தமிழ் சினிமாவில் நடிகர்களுக்கு இணையாக உயர்ந்த இடத்தில் உள்ளார்கள்.எனவே, தமிழ் சினிமா மீது எனக்கு மிகுந்த காதல் உள்ளது. தமிழ் சினிமாவில் அனைவருடனும் சேர்ந்து நடிக்க வேண்டும் என்பது என் ஆசை. சிவகார்த்திகேயனின் டைமிங் காமெடி எனக்கு மிகவும் பிடிக்கும். கல்லூரி படிக்கும் காலத்தில் நான் சூர்யாவின் தீவிர ரசிகை. அவர்மீது ‘கிரஷ்’ இருந்தது. அவருடன் இணைந்து நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறேன்” என்றார்.