சென்னையில் உள்ள பல பேங்குகளை ஒரு இரவில், ஒரே நேரத்தில் கொள்ளை அடிக்க திட்டமிடுகிறது அஸ்வின் தலைமையிலான கும்பல். அன்றைக்குதான் பணியில் சேர்ந்த அதர்வா உள்ளிட்ட 6 போலீஸ் கான்ஸ்டபிள்களுக்கு தற்செயலாக இந்த திட்டம் தெரிய வருகிறது. கொள்ளை அடிக்க நினைப்பவர்கள் யார்? அவர்கள் நோக்கம் என்ன? அதர்வா டீம் அந்த திட்டடத்தை முறியடித்ததா? இதுதான் ரவீந்திர மாதவா இயக்கிய தணல் படத்தின் கதை.

பேங்க் கொள்ளை பேக்கிரவுண்ட்டில் எத்தனையோ படங்கள் வந்துவிட்டன. போலீஸ் கதைக்கு பஞ்சமே இல்லை. ஆனாலும், இதுவரை இல்லாத ஒரு புது பாதையில் தணலை சொல்லியிருப்பது ஆறுதலான விஷயம். சென்னை போலீஸ் ஸ்டேஷன் ஒன்றில் அதர்வா, பரணி, சாரா, சர்வா உள்ளிட்ட 6 பேர் ஒரேநாளில் பணியில் சேரும்போது, இரவு ரவுண்ட்டுக்கு அவர்களை அனுப்புகிறார் சப் இன்ஸ்பெக்டர். ஆட்கள் இல்லாத ஒரு குடிசை பகுதிக்குள் நுழையும் அவர்களில் சிலர் கொல்லப்படுகிறார்கள். என்ன நடக்கிறது என்று தெரியாமல் தவிக்கிறார் ஹீரோ அதர்வா. பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக நடப்பதை அறிந்து போலீஸ் டீமை தொடர்பு கொள்ள நினைக்கிறார்.ஆனால், சிக்னல் இல்லாத நிலை. அடுத்து என்ன செய்கிறார் என்பதை கொஞ்சம் விறுவிறுப்பாக சொல்கிறார் இயக்குனர்
கான்ஸ்டபிள், காதலன், ஆபரேசனுக்கு காத்திருக்கும் அம்மாவின் மகன் என 3 விதமான நடிப்பை தந்து இருக்கிறார் அதர்வா. அவருக்கும், லாவண்யாவுக்குமான காதல் காட்சிகள் கியூட்டாக இருக்கிறது. அம்மா சம்பந்தப்பட்ட எமோஷனலும் வொர்க் அவுட் ஆகி இருக்கிறது. இந்த இரண்டை விட, போலீஸ்காரராக அவரின் ஆக் ஷன், அந்த கும்பல் நோக்கத்தை கண்டுபிடிக்கும் சுறுசுறுப்பு படத்தை துாக்கி நிறுத்துகிறது. அதர்வா கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார். பெரும்பாலான காட்சிகள் இரவு நேரத்தில் ஒரு பெரிய குடிசை பகுதியில் நடக்கிறது. அதில் நடக்கும் மர்மமான விஷயங்கள், அவ்வப்போது தாக்கும் வில்லன் டீம், அவர்களின் திட்டமும், அங்கே நடக்கும் சஸ்பென்ஸ் விஷயங்களும் படத்தின் பெரிய பிளஸ்.
பொதுவாக வில்லன்கள் பணத்தாசைக்காக பேங்கை கொள்ளை அடிப்பார்கள். இதில் வில்லன் என்று சொல்ல முடியாது. அஸ்வினும் ஒருவகையில் ஹீரோதான். விவசாய குடும்பத்தில் பிறந்து, சுரங்கத்தில் வேலை பார்த்த அஸ்வின் ஏன் மாறினார்? அவருக்கு போலீஸ் மீது என்ன கோபம் என்று சொல்லும் விதம் புதுசாக இருக்கிறது.