ஒரு வேன் விபத்து குறித்து விசாரணை நடத்துகிறார் போலீஸ் அதிகாரியான புதுமுக ஹீரோ ஆதித்ய மாதவன். டாக்டரான ஹீரோயின் கவுரி கிஷன் தான் பணிபுரியும் ஆஸ்பிட்டலில் நடக்கும் ஒரு முறைகேடு குறித்து கேள்வி கேட்கிறார். இந்த இரண்டு பிரச்னைகளும் ஒரு இடத்தில் சந்திக்கின்றன. இதற்கு பின்னணியில் ஒரு பெரிய மெடிக்கல் கிரைம் இருப்பது தெரிய வருகிறது. சமூகத்தில் திருநங்கைகள், திருநம்பிகள் அதிக அளவில் உருவாக வேண்டும் என்று நினைக்கும் சஸ்பென்ஸ் வில்லன் பின்னணி. அப்படி அவர் செய்ய காரணம் என்ன என்பதை, ஒரு மாறுபட்ட கோணத்தில் சொல்லியிருக்கிறார் புதுமுக இயக்குனர் அபின் ஹரிஹரன்.

ஒரு வேன் விபத்தில் இருந்து கதை தொடங்கிறது. அதில் சிலர் இறக்குகிறார்கள். அது குறித்து விசாரிக்கும்போது, ஆதரவற்றோர் இல்லங்களில் நடக்கும் சில முறைகேடுகள் ஹீரோவுக்கு தெரிய வருகிறது. அதற்கு காரணமானவர்களை ஹீரோ தேடும்போது மெடிக்கல் கிரைம் தெரிய வருகிறது. அதை தீவிரமாக விசாரிக்கும்போது இன்னும் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வருகின்றன. பல திருப்பங்கள் நிகழ்கின்றன. இப்படிப்பட்ட மெடிக்கல் முறைகேடுகள் நடக்குமா என்று பதறும் ஹீரோ, அந்த வில்லனை தேடுகிறார். அவனோ கண்ணாமூச்சி ஆட்டம் ஆடுகிறான். அடுத்து என்ன நடக்கிறது என்ற விறுவிறு திரைக்கதையில், இதுவரை யாரும் சொல்லாத, ஒரு விஷயத்தை கையில் எடுத்து ஒரு சமூக பிரச்னையையும் பேசியிருக்கிறார் இயக்குனர்
புதுமுகம் ஆதித்ய மாதவன் போலீஸ் வேடத்துக்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறார். விசாரணை காட்சிகளில் கோபம் காண்பிக்கிறார். வில்லனை கண்டுபிடிக்கும் காட்சிகளில், கிளைமாக்சில் ஆர்வம் காண்பிக்கிறார். புதுமுகம் என்பதால் சில இடங்களில் திணறவும் செய்கிறார். டாக்டராக வரும் கவுரி கிஷன் அந்த கேரக்டராக மாறி இயல்பாக நடித்து இருக்கிறார். ஒரு பாடல் காட்சியில் அழகாகவும் இருக்கிறார். இவர்களை தவிர, இன்னொரு போலீஸ் அதிகாரியாக வரும் அஞ்சு குரியன், போலீஸ் ஆக வரும் முனிஸ்காந்த் ஆகியோரின் நடிப்பும் ஓகே. அஞ்சு குரியனின் அந்த கிளைமாக்ஸ் சண்டை செம.
பல படங்களில் காமெடியனாக வந்த நண்டு ஜெகனுக்கு இதில் வில்லத்தனமான வேடம். அதில் அவர் பாஸ் ஆகி இருக்கிறார். அவர் கெட்டப், நடிப்பு ரசிக்க வைக்கிறது. சின்ன வேடத்தில் வந்தாலும் இயக்குனர் ஆர்.சுந்தர்ராஜன் மனதில் நிற்கிறார். இவர்களை விட படத்தில் ஸ்கோர் செய்து, ‘யாருப்பா இது’ என கேட்க வைத்து இருப்பவர் ஆரம்பத்தில் அப்பாவி மெக்கானிக் ஆக வந்து, பின்னர், பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரனாக போலீசில் நடித்து, கடைசியில் தனது உண்மையான முகத்தை காண்பிக்கும் மூர்தான். அவர் நடித்த ஒவ்வொரு காட்சியும், ஒவ்வொரு வசனங்களும், ஒவ்வொரு மேனரிசமும் சபாஷ் போட வைக்கிறது. சமூகத்தில் புறக்கணிக்கப்படும் ஒரு பிரிவுக்காக அவர் பேசும் வசனங்கள், கேட்கும் கேள்விகள் மனதை உலுக்குகிறது. கிளைமாக்சில் அரை மணி நேரம் அவர் ருத்ரதாண்டவம் ஆடியிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.
திருநங்கைகள், திருநம்பிகளை புறக்கணிக்ககூடாது. அவர்களின் கோபம், உணர்வுகளை புரிந்து கொள்ள வேண்டும். ஆண், பெண் தவிர, அதர்ஸ் என்ற இனம் இருக்கிறது. அவர்கள் குரலை நாம் கேட்க வேண்டும் என்ற நல்ல பதிவாக அதர்ஸ் வந்துள்ளது.

