கமல்ஹாசன் – மணிரத்னம் கூட்டணியில் உருவாகியுள்ள ‘தக் லைப்’ படம் நாளை உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இந்த நிலையில், ‘தக் லைப்’ படக்குழு தற்போது செய்தியாளர்களை சந்தித்தது.

இந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய கமல்ஹாசன், நான் முதன்முதலில் சந்தித்த மணி ஒரு இளைஞராக இருந்தார். இன்று அவர் ஒரு சினிமா ஞானியாக இருக்கிறார். அவருடன் பணியாற்றுவதில் எனக்கு மிகுந்த குதூகலம் ஏற்பட்டது. சர்வதேச தரத்திற்கு இணையாக ‘தக் லைப்’ உருவாகியுள்ளது.
‘உயிரே, உறவே, தமிழே’ என்று நான் பேசியதில் உள்ள ஆழமான அர்த்தத்தை இப்போது நான் உணர்கிறேன். எனக்கு உறுதுணையாக நின்ற நிற்கும் தமிழ்நாட்டிற்கு மனமார்ந்த நன்றி. நான் இன்னும் பல விஷயங்களைப் பேச விரும்புகிறேன். ஆனால், அவை ‘தக் லைப்’ படத்தைச் சார்ந்தவை அல்ல. இருந்தாலும், அந்த விஷயங்களைப் பற்றி பேச நேரம் ஒதுக்குவது ஒரு தமிழனாக என்னுடைய கடமையாகும்” என்றுள்ளார்.