கட்ஸ் – நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் தனது மனைவி சுருதி நாராயணனை பிரசவத்திற்காக அழைத்து செல்லும் ரங்கராஜ், ஒரு கும்பலால் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்படுவதில் தொடங்குகிறது. அதன் விளைவாக, பிறந்தவுடன் தந்தையை இழக்கும் மகன் ரங்கராஜ், சிறு வயதில் தாயையும் இழக்கிறார். தாயின் விருப்பப்படி போலீஸ் அதிகாரியாக மாறும் ரங்கராஜ், நேர்மையுடன் தனது மனைவி நான்சி மற்றும் மகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்.

ஆனால் எதிர்பாராத வகையில், அவரது மனைவி நான்சி, வீட்டிலேயே கொடூரமாக கொலை செய்யப்படுகிறார். மனைவியின் இழப்பால் சோகத்தில் மூழ்கும் ரங்கராஜ்க்கு, தன்னுடைய மனைவியையும், தந்தையையும் கொலை செய்தவர் குறித்து தகவல் கிடைக்கிறது. அந்த கொலையாளி யார்? அவர் எதற்காக இந்தக் கொலைகளை செய்தார்? பின்னணியில் என்ன காரணம் உள்ளது என்பது தான் தொடரும் கதையின் மையப்புள்ளி.
இப்படத்தில் ரங்கராஜ் தந்தை மற்றும் மகன் என்ற இரட்டை கதாப்பாத்திரத்தில் நடித்தும், இயக்கியும் இருக்கிறார். நடிகர் மற்றும் இயக்குநர் என இரட்டைப் பணி செய்துள்ள அவரின் முயற்சி பாராட்டத்தக்கது. கதை எனும் ரயிலை தண்டவாளத்தில் இயக்கியதுபோல், ஆனால் திரைக்கதை எனும் வேகத்தில் சிறு சீர்கேடு இருந்தது. பயணத்தை மெதுவாக அழைத்துச் சென்ற ரயில்போல், சில இடங்களில் ரசிகர்களின் பொறுமையை சோதிக்கிறது. இருந்தாலும், படத்தை முழுமையாக எடுத்துச் சென்றுள்ளார்.
தந்தையாக மிரட்டும் தோற்றத்திலும், போலீஸ் அதிகாரியாக நேர்த்தியான நடிப்பிலும் ரங்கராஜ் சிறந்து விளங்குகிறார். மனைவியுடன் பாசம் பொழியும் காட்சிகள், அவர் இறந்தபின் வருந்தும் தருணங்கள் போன்றவை உணர்வுபூர்வமாக நடித்துள்ளார். இயக்குநராக இக்கதைக்கேற்ற முடிப்பை கொடுக்க இன்னும் வளர்ச்சி தேவைப்படுகிறது.
சுருதி நாராயணன், கிராமப்புறக் கர்ப்பிணிப் பெண்ணாக தனது நடிப்பில் நிஜ உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளார். அவரது கதாபாத்திரம் வலுவானது. மனைவியாக வரும் நான்சி சில காட்சிகளில் மட்டுமே தோன்றினாலும், அவரது நடிப்பு சிறப்பாக பதிவு ஆகிறது. டெல்லி கணேஷ் (போலீசாக), பிர்லா போஸ் (சப் இன்ஸ்பெக்டராக), சாய் தீனா, ஸ்ரீலேகா, அறந்தாங்கி நிஷா ஆகியோரின் நடிப்பும் படத்தை உயர்வடைய உதவுகிறது.
மனோஜ் செய்த ஒளிப்பதிவு கிராமத்தை அழகாக காட்டி இருக்கிறது; ஒவ்வொரு ஷாட்டும் கவனத்தை ஈர்க்கிறது. இசையமைப்பாளர் ஜோஸ் பிராங்க்ளின் படத்திற்கு ஒத்துச்செல்லும் பின்னணி இசையை வழங்கியுள்ளார். எனினும், பாடல்களில் சிறு கூடுதல் கவனம் இருந்திருந்தால் மேலும் சிறந்திருக்குமென்று கூறலாம்.