இசையமைப்பாளர் ஜி. வி. பிரகாஷ் தற்போது நடிகராக தனது 25வது திரைப்படமான ‘கிங்ஸ்டன்’ படத்தில் நடித்துள்ளார். அறிமுக இயக்குநர் கமல் பிரகாஷ் இயக்கியுள்ள இந்த படத்தில் திவ்ய பாரதி கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தை ஜி.வி. பிரகாஷின் பேரலல் யூனிவர்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ள இப்படம் இந்திய கடலில் நடக்கும் முதல் அட்வென்ச்சர் ஹாரர் திரைப்படம் என குறிப்பிடப்படுகிறது. இந்த படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
இந்த படத்தைப் பற்றி இயக்குநர் கமல் பிரகாஷ் கூறியதாவது, திரைப்படத்தில் 3000 விஎஃப்எக்ஸ் காட்சிகள் உள்ளன. தமிழ் சினிமாவில் இதுவரை உருவாக்கப்படாத மிகப்பெரிய கப்பல் செட் இதற்காக உருவாக்கப்பட்டது. சிஜி சிக்கல்களை தவிர்ப்பதற்காக பேய்கள் கதாபாத்திரமாக வரும் நடிகர்களுக்கு இயல்பான தோற்றத்தை உருவாக்கும் வகையில் மேக்கப் செய்யப்பட்டது. அந்த மேக்கப்பை அகற்ற 8 மணி நேரம் எடுத்தது. பிரம்மாண்டமான செட்டில் 21 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றது. அந்தக் காலக்கட்டத்தில் மழை, பனி போன்ற சிக்கலான சூழல்களும் செட்டப் செய்யப்பட்டன. ஆனால் 21 நாட்களிலேயே படத்தின் இரண்டாம் பாதியை முடித்துவிட்டோம்.
“நாங்கள் நீருக்கடியில் படப்பிடிப்பு மேற்கொண்டோம். இதற்காக பம்பாய் குழுவிலிருந்து சிறப்பு நிபுணர்களை அழைத்தோம். இதுவரை இந்திய சினிமாவில் கடலுக்குள் படம் எடுக்கப்படவில்லை. இப்படம் முதல் முறையாக கடலுக்கடியில் எடுக்கப்பட்டிருப்பதால், இது ஒரு பெரும் சாதனை எனலாம். மீனவ கிராமத்தினர், அவர்கள் கடலுக்குள் சென்று மீன்பிடிக்க முடியாத சூழல் போன்றவற்றை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட கதையாக இந்த படம் இருக்கும்,” என தெரிவித்தார்.