பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலளிக்க இந்திய ராணுவம் கடந்த புதன்கிழமை “ஆபரேஷன் சிந்தூர்” என்ற திட்டத்தின் கீழ் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. இதில் மொத்தம் 9 பயங்கரவாத முகாம்கள் மிகத் துல்லியமாக அழிக்கப்பட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதலில் 30-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. பஹல்காமில் கணவரை இழந்து, அதன் மூலம் குங்குமத்தையும் இழந்த பெண்களின் வலி மற்றும் இழப்பை பிரதிபலிக்கும் வகையில் இந்த தாக்குதலுக்கு “சிந்தூர்” என பெயரிடப்பட்டது.இந்நிலையில் இந்த ராணுவ நடவடிக்கையை மையமாக வைத்து “ஆபரேஷன் சிந்தூர்” என்ற பெயரில் ஒரு திரைப்படத்தை உருவாக்கும் நோக்குடன் பாலிவுட் தயாரிப்பாளர்கள் முனைந்துள்ளனர். இதனால் அந்த பெயருக்கான காப்புரிமையை பெறும் போட்டியில் பல தயாரிப்பு நிறுவனங்கள் பங்கேற்று வருகின்றன.
இத்தகைய ராணுவ பின்னணியில் படங்களைத் தயாரிக்கும் நார்த் மேக்கர்ஸ் உள்ளிட்ட 15 நிறுவனங்கள் “ஆபரேஷன் சிந்தூர்” என்ற பெயருக்கு உரிமை கோரியுள்ளன. இதில் டி-சீரிஸ், ஜீ ஸ்டுடியோஸ் போன்ற முன்னணி நிறுவனங்களும் இடம்பெற்றுள்ளன. அனைத்து 15 விண்ணப்பங்களும் மதிப்பீடு செய்யப்பட்ட பின்பு, இந்த பெயர் விரைவில் ஒரே நிறுவனத்திற்கு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு முன்னர், அம்பானியின் ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் இந்த பெயருக்காக விண்ணப்பித்திருந்தது. எனினும், இந்த பெயரை பயன்படுத்துவது ராணுவ நடவடிக்கையை வணிகரீதியாகும் வகையில் மாற்றுவது சரியல்ல என சமூக ஊடகங்களில் ஏற்பட்ட கடும் விமர்சனங்களைத் தொடர்ந்து, ரிலையன்ஸ் நிறுவனம் தனது விண்ணப்பத்தைத் திரும்பப் பெற்றது.