சச்சுஸ் கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் பவுலோஸ் ஜார்ஜ் தயாரித்துள்ள படம் ‘அகமொழி விழிகள்’. இப்படத்தை சசீந்திரா கே. சங்கர் இயக்கியுள்ளார். இதில் ஆதம் ஹசன் மற்றும் நேஹா ரத்னாகரன் நாயகனும் நாயகியும் நடித்துள்ளார்கள். இவர்களுடன் தர்மஜன், ஷாஜூ, குலப்புலி லீலா, ராஜீவ் கண்ணன், சி.கே.ஆர், ஹரிதா, ராஷீ மற்றும் தீபு ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படம் மே மாதம் 9ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. விழாவில் இயக்குனர் பேரரசு பேசும் போது கூறியதாவது: ‘அகமொழி விழிகள்’ என்ற பெயர் மிக அழகாக உள்ளது. தமிழை சரியாகப் பேசத் தெரியாத தயாரிப்பாளர், தமிழில் எழுதி வைத்து படித்து பேசும் நிலைமை மிகுந்த மதிப்பை உணர்த்துகிறது. நான் சிவகாசி படத்தை இயக்கிய போது அந்த படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டது. அப்போது தெலுங்கில் நடந்த விழாவில் பேசிய போது ஏற்பட்ட சிரமங்களை நினைவு கூர்ந்தேன். இப்போது தான் புரிகிறது, எழுதி வைத்துப் படித்திருக்கலாம் என்று.
தமிழ் திரைப்படம் மங்கிவருவதாக சிலர் கூறுகின்றனர். இதற்காக அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும். தியேட்டரில் டிக்கெட் விலையை நிர்ணயிக்கும்போது பாப்கார்ன் உள்ளிட்ட சாப்பாட்டுப் பொருட்களின் விலையும் கட்டுப்படுத்தப்பட வேண்டும். மக்களுக்காக அரசாங்கம் இருக்கிறதே என்றார். மேலும், எப்போதும் நல்ல கதையை நம்பி படங்களை உருவாக்குங்கள். உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்காக படங்களை எடுக்காதீர்கள். அப்படி செய்தால் படம் ஓடாது என்று பேரரசு கூறினார்.