மலையாளத்தில் ‘ஒரு வடக்கன் செல்பி’ என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான மஞ்சிமா மோகன், அதன் பிறகு கவுதம் மேமனின் இயக்கத்தில் வெளிவந்த ‘அச்சம் என்பது மடமையடா’ திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். தொடர்ந்து சில தமிழ்ப் படங்களில் நடித்தார். கடைசியாக சூழல் 2 திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். அந்த கதாபாத்திரம் அவருக்கு மிகப்பெரிய வரவேற்பையும் பாராட்டையும் பெற்றுத்தந்தது.

இந்த நிலையில், சமீபத்தில் இந்தியாவை மட்டுமின்றி உலகத்தையும் உலுக்கிய ஆமதாபாத் விமான விபத்தையும், அதனை தொடர்ந்து நிகழ்ந்துவரும் சில மனிதமற்ற செயல்களையும் மஞ்சிமா தனது வருத்தத்துடனும் கோபத்துடனும் வெளியிட்டுள்ளார் அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது: “மனிதநேயம் போய்விட்டதா? இதயத்தை பதறவைக்கும் அந்த விமான விபத்தில் பலர் தங்கள் உயிரை இழந்துள்ளனர். ஆனால் சிலர் இந்த சம்பவத்தை லாபமாக மாற்றிக்கொள்ள முயற்சிக்கிறார்கள். அந்த விபத்தை சென்சேஷனாக மாற்றி, ஜோதிடம், எண்கணிதம் போன்ற விஷயங்களால் மக்களை பயமுறுத்துகிறார்கள். அதேபோல், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை சேர்ந்தவர்களிடம் குறும்பான கேள்விகளை கேட்டு, வன்முறையாக மைக்கை முகத்தில் காட்டி பேச வற்புறுத்துகிறார்கள்.
இந்த நேரத்தில் நாம் இரக்கம், மரியாதை போன்றவை தேவைப்படும் நேரத்தில் இப்படி நடந்து கொள்வது சரியா? இதுவே அடுத்த தலைமுறைக்கு நாம் கொடுக்கவிருக்கும் எடுத்துக்காட்டு என்றால் அது மிகவும் வருத்தமளிக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.