பாலிவுட் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி 2022 ஆம் ஆண்டில் “தி காஷ்மீர் பைல்ஸ்” என்ற திரைப்படத்தை வெளியிட்டு நாடு முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர். 1990களில் காஷ்மீரில் இந்து பண்டிட்களுக்கு எதிராக நடைபெற்ற பயங்கரவாதச் சம்பவங்களையும், அதன் காரணமாக காஷ்மீரை விட்டு வெளியேறிய பண்டிட்களின் உண்மை வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டது.

இதைத் தவிர அவர் 2019 ஆம் ஆண்டு “தி தாஷ்கண்ட் பைல்ஸ்” என்ற திரைப்படத்தையும் இயக்கியிருந்தார். “தி காஷ்மீர் பைல்ஸ்” வெற்றிக்குப் பிறகு, அவர் “தி வேக்ஸின் வார்” என்ற திரைப்படத்தையும் இயக்கினார். ஆனால் அந்த படம் பெரிதளவில் கவனத்தை ஈர்க்கவில்லை.
தற்போது அவர் “தி டெல்லி பைல்ஸ்” என்ற பெயரில் ஒரு புதிய திரைப்படத்தை இயக்கி வந்தார். ஆனால் சமீபத்தில், இந்த படத்தின் பெயரை அதிகாரப்பூர்வமாக “தி பெங்கால் பைல்ஸ்” என்று மாற்றியுள்ளதாக அறிவித்துள்ளார். இந்த திரைப்படம் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
1940களில் பிளவுபடாத வங்கதேசத்தில் நடைபெற்ற வன்முறை சம்பவங்களை மையமாகக் கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், இது இரண்டு பாகங்களாக உருவாக்கப்பட்டுள்ளதாலும், இதன் உள்ளடக்கம் முழுவதும் வங்காளத்தைச் சுற்றி அமைந்துள்ளதாலும், படத்தின் பெயரை “தி பெங்கால் பைல்ஸ்” என மாற்றியுள்ளதாகவும், விவேக் அக்னிஹோத்ரி தெரிவித்துள்ளார்.