ஷாருக்கான் நடித்த ‘ஜவான்’ படத்தை இயக்கிய அட்லி, அடுத்து அல்லு அர்ஜுனை வைத்து தனது ஆறாவது திரைப்படத்தை இயக்க தயாராகி வருகிறார். சமீபத்தில் சென்னைச் சத்தியபாமா பல்கலைக்கழகம் இயக்குநர் அட்லிக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது. அந்த விழாவில் பேசிய அவர், “நான் இயக்கும் படங்கள் திரைக்கு வந்தவுடன், அவை பிற படங்களின் கதைகளை பின்பற்றியதாக விமர்சனங்கள் எழும். ஆனால் எனக்காக, நான் நேரில் பார்த்த மற்றும் அனுபவித்த விஷயங்களை வைத்து தான் படங்களை உருவாக்குகிறேன்,” எனத் தெரிவித்தார்.

“அதன் ஒரு எடுத்துக்காட்டாக, ‘பிகில்’ படத்தில் இடம்பெற்ற ராயப்பன் கதாபாத்திரம், ஜே.பி.ஆரை நினைவுபடுத்தும் வகையில் உருவாக்கப்பட்டது. அவர் கல்விக்காக மட்டும் இல்லாமல், விளையாட்டிற்கும் பெரிதும் துணைபுரிந்தவர். நான் சத்தியபாமா கல்லூரியில் முதல் ஆண்டு படிக்கும்போது ஒரு குறும்படம் எடுத்திருந்தேன். அதன் பிறகு எனது செயல்பாட்டை பார்த்த சிலர் ஜே.பி.ஆரை சந்திக்குமாறு கூறினார்கள். அவரை சந்தித்தபோது, ‘கேமரா எடுத்துக்கோ, சீக்கிரம் இயக்குனர் ஆகப்போற’ என்று கூறினார். அவர் சொன்ன அந்த வார்த்தை இப்போது நிஜமாகிவிட்டது,” என்று கூறினார்.
“என் பெற்றோர் நான் இயக்குநராக மாறும் வரை எனக்கு உறுதுணையாக இருந்தார்கள். அதன் பிறகு, இன்று நான் இவ்வளவாக வளர்ச்சியடைந்ததற்கும், நான் இந்நிலையில் இருப்பதற்கும் முழுமையாக என் மனைவியே காரணம். மேலும், என்னை நல்ல மனிதராக மாற்றியதற்கான முக்கிய காரணமாக என் மகனும், என் அண்ணனாக இருக்கும் நடிகர் விஜயும் உள்ளனர்,” என்றும் உருக்கமாகப் பேசியார்.