சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் ‘குபேரா’ திரைப்படத்தில், நாகார்ஜூனா மற்றும் ராஷ்மிகா மந்தனாவும் நடித்துள்ளனர். இப்படத்தின் மூன்றாவது பாடல் வெளியீட்டு விழா சமீபத்தில் மும்பையில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றிய நாகார்ஜூனா, தனது திரை பயணத்தின் தொடக்கத்திலிருந்தே வட இந்தியாவிலும் பல படங்கள் சிறந்த வரவேற்பைப் பெற்றுள்ளதாக குறிப்பிட்டார்.

அவர் கூறியதாவது:
“நான் தொடர்ந்து ஒரே மாதிரியான கதைகளிலும், கதாப்பாத்திரங்களிலும் நடிக்கக்கூடாது என்று யோசித்தபோதுதான் இந்தப் படம் என்னிடம் வந்தது. சேகர் கம்முலாவுடன் பணியாற்ற வேண்டும் என்பதற்காக கடந்த 15 ஆண்டுகளாகக் காத்துக் கொண்டிருந்தேன். இந்தப் படத்தில் நடிக்க முடியுமா என்று அவர் கேட்டவுடன், உடனடியாக சம்மதம் தெரிவித்தேன்.
ஏனெனில், அவருடைய முந்தைய படங்களை நான் பார்த்திருக்கிறேன். அவர் எப்போதும் பொறுப்புணர்வான கதைகளை உருவாக்குகிறவர். இப்படத்தில் ராஷ்மிகாவின் காட்சிகளை நான் டப்பிங் செய்யும்போது பார்த்தேன். அடுத்த நிமிடமே அவரை அழைத்துப் பேசினேன். ராஷ்மிகாவின் கதாப்பாத்திரம் நம்மை சிரிக்க வைக்கும். தனுஷ் ஒரு அற்புதமான நடிகர். இந்தப் படத்துக்காக அவர் தனது தோற்றம் மற்றும் நடிப்பை முற்றிலும் மாற்றி தன்னையே அர்ப்பணித்துள்ளார் என்றார் நாகார்ஜூனா.