இலங்கையில் உள்நாட்டு போர் முடிந்த பிறகு அங்குள்ள தமிழ் மக்களின் வாழ்வு எவ்வாறு இருக்கிறது என்பதைக் கூறும் படம் தான் ‘ஒற்றைப் பனை மரம்’. இந்த படம் சில ஆண்டுகளுக்கு முன்பே தயாரானது. உலகளாவிய அளவில் 40க்கும் மேற்பட்ட சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு, 17 விருதுகளை வென்றுள்ளது.
இந்தப் படத்தை ‘மண்’ படத்தின் இயக்குநர் புதியவன் ராசையா இயக்கி, நடித்துள்ளார். நவயுகா, அஜாதிகா புதியவன், மாணிக்கம் ஜெகன், தனுவன் போன்ற பலரும் இதில் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு மகிந்த அபேசிங்காவின் பணியாகும். அக்ஷயா இசையமைத்துள்ளார். இந்த படம் வரவிருக்கும் 25ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
படத்தைப் பற்றி இயக்குநர் புதியவன் ராசையா கூறியதாவது, “இலங்கையில் உள்நாட்டு போர் முடிவடையும் கடைசி நாட்களில் தொடங்கும் இந்தக் கதை, போரின் பிந்தைய முன்னாள் போராளிகளின் வாழ்க்கை மற்றும் மக்களின் அவலங்களை வெளிப்படுத்தும். ‘ஒற்றைப் பனை மரம்’ ஒரு நம்பகமான கதை, உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கிறது. இயல்பான காட்சியமைப்பு, உண்மையான நடிப்பு மற்றும் உணர்ச்சி கடத்தும் திருப்பங்களால் பார்வையாளர்களை ஈழத் தமிழ் மக்களின் வாழ்வுக்குள் கொண்டு செல்கிறது,” என்றார்.