நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவனின் திருமண விழா மற்றும் அவர்களது வாழ்க்கையைப் பற்றிய வீடியோக்களைத் தொகுத்து டார்க் ஸ்டூடியோ நிறுவனம் ஆவணப்படமாக தயாரித்து, 2024ஆம் ஆண்டு ‘நெட்பிளிக்ஸ்’ ஓடிடி தளத்தில் வெளியிட்டது. இந்த ஆவணப்படத்தில், நடிகர் தனுஷின் நிறுவனமான ‘வொண்டர்பார் பிலிம்ஸ்’ தயாரித்த ‘நானும் ரவுடி தான்’ படத்தின் படப்பிடிப்பு காட்சிகளும் இடம்பெற்றிருந்தன. ஆனால், தனது அனுமதியின்றி அந்த படக் காட்சிகள் பயன்படுத்தப்பட்டதாக கூறி, நடிகர் தனுஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தற்போது இந்த வழக்கு விசாரணை நிலையில் உள்ளது.

இதே ஆவணப்படத்தில், ‘சந்திரமுகி’ திரைப்படத்தின் சில காட்சிகளும் அனுமதியின்றி சேர்க்கப்பட்டுள்ளதாகவும், இதனால் ₹5 கோடி நஷ்டஈடு வழங்கவேண்டும் எனக் கோரி, அந்த படத்தின் பதிப்புரிமை பெற்ற ஏபி இன்டர்நேஷனல் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், டார்க் ஸ்டூடியோ மற்றும் நெட்பிளிக்ஸ் நிறுவனங்கள் 2 வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.