மலையாள நடிகர் உன்னி முகுந்தன், தனது மேலாளரை தாக்கியதாக கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையில், அவர்மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

நடிகர் டோவினோ தாமஸின் ‘நரிவேட்டை’ திரைப்படத்துக்கு நேர்மறையான விமர்சனத்தை சமூக ஊடகங்களில் பகிர்ந்ததற்காக, உன்னி முகுந்தன் தன்னை தாக்கியதாகவும் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் விபின் என்பவர் சமீபத்தில் போலீசில் புகார் அளித்தார். இந்த தகவல் இணையத்தில் விரைவாக பரவி, பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியது. இந்நிலையில், விபின் எழுப்பிய குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்து, உன்னி முகுந்தன் தனது பார்வையை வெளிப்படுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “கடந்த 2018ஆம் ஆண்டு, நான் எனது சொந்த தயாரிப்பில் ஒரு படத்தை தயாரிக்கத் திட்டமிட்டிருந்தபோது, விபின் குமார் என்னை தொடர்புகொண்டார். ஆனால், அவரை நான் ஒருபோதும் என் தனிப்பட்ட மேலாளராக நியமிக்கவில்லை. அவரால் எனக்கு பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டன. நான் அவரை எந்த வகையிலும் தாக்கவில்லை. அவர் சுமத்திய அனைத்து குற்றச்சாட்டுகளும் முழுமையாக பொய்யானவை. எனக்கு எதிராக அவர் கூறும் ஒவ்வொரு குற்றச்சாட்டும் உண்மைக்கு புறம்பானது,” என அவர் தெரிவித்திருக்கிறார்.