விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘தி கோட்’ திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து, அவர் வினோத் இயக்கத்தில் தனது 69வது படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்துடன் சினிமா பயணத்தை முடித்து, அரசியலுக்குச் செல்ல திட்டமிட்டுள்ளார். இதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு உயர்ந்துள்ளது. இந்த படத்தை பெங்களூருவைச் சேர்ந்த கேவிஎன் நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார். படத்தின் படப்பிடிப்பு இந்த வாரத்தில் துவங்க உள்ளது.
இந்நிலையில், இந்த படத்தில் நடிக்க உள்ள நடிகர்கள் பற்றிய அறிவிப்புகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. அந்த வரிசையில், ஹிந்தி நடிகர் பாபி தியோல், நடிகைகள் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பிரியாமணி, மற்றும் நடிகர், இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் இதில் நடிக்கின்றனர் என்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
தற்போது நடிகர் நரைனும் இப்படத்தில் இணைந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பல நட்சத்திரங்கள் இப்படத்தில் இணைந்திருப்பதால், இதன் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.