கடந்த ஆண்டு இயக்குநர் சாந்தகுமார் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் நடித்த ரசவாதி திரைப்படம் வெளியானது. இந்த படத்திற்கு விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்தாலும், வசூல்பார்வையில் அது பெரிதளவில் வெற்றியடையவில்லை.
இப்போது இந்த திரைப்படத்திற்காக நடிகர் அர்ஜுன் தாஸ் தாதா சாகேப் பால்கே விருதை பெறவுள்ளார். இது ரசவாதி படத்திற்காக அவர் பெறும் மூன்றாவது விருதாகும். இந்த தகவலை எக்ஸ் தளத்தில் பகிர்ந்த இயக்குநர் சாந்தகுமார், “ரசவாதி திரைப்படத்தில் சதாசிவம் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்த அர்ஜுன் தாஸ், தாதா சாகேப் பால்கே திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான விருதைப் பெறுகிறார். இந்த விழாவுக்கு 2025ல் பதிவு செய்யப்பட்ட 700க்கும் மேற்பட்ட படங்களில் இருந்து ரசவாதி தேர்வாகியுள்ளது. ரசவாதி படத்திற்காக மூன்றாவது முறையாக விருது பெற்றுள்ள அர்ஜுன் தாஸுக்கு எனது வாழ்த்துகள்,” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ரசவாதி திரைப்படத்தின் ஒலிப் பொறியாளராக பணியாற்றிய தபாஸ் நாயக், 9 உலக திரைப்படங்களை மிஞ்சி சிறந்த ஒலி வடிவமைப்புக்கான விருதைப் பெற்றுள்ளார். ரசவாதி படம் 5 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.