இந்திய சினிமாவில் ‘மகாபாரதம்’ கதையை திரைப்படமாக்கும் முயற்சி பல இயக்குநர்களால் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் எந்த ஒரு முயற்சியும் பெரிதாக அடுத்த கட்டத்தை நோக்கி நகரவில்லை. இந்நிலையில், சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில், தனது வாழ்நாள் இலக்காக ‘மகாபாரதம்’ கதையை திரைப்படமாக்க வேண்டும் என்பதுதான் என்கிறார் நடிகர் அமீர்கான்.

அதனைத் தொடர்ந்து, மற்றொரு பேட்டியில் அவர், “இந்த ஆண்டில் ‘மகாபாரதம்’ திரைப்படத்திற்கான பணிகளை ஆரம்பிக்க உள்ளேன்” என குறிப்பிட்டுள்ளார். மேலும் அதில் அவர் கூறியதாவது, “எனக்கு உள்ள ஒரே இலக்கு இந்த வருடத்திற்குள் ‘மகாபாரதம்’ படத்தின் பணிகளை ஆரம்பிப்பதுதான். ஆனால், படம் எடுக்க ஆரம்பிக்க சில காலம் ஆகும். காரணம், முதலில் முழுமையாக கதையை எழுதிப் பிறகு தான் படப்பிடிப்பை துவங்க முடியும். இதற்கே சில மாதங்கள் தேவைப்படும்.
இது ஒரு பெரிய கதை என்பதால், இதனை பல பாகங்களாக இயக்க திட்டமிட்டு இருக்கிறேன். ஒவ்வொரு பாகத்திற்கும் ஏற்ப அவர்களுக்கு பொருத்தமான நடிகர்களை தேர்வு செய்வேன். இதில் நான் நடிப்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. ஆனால், ‘லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்’ போன்ற பாணியில் ஒவ்வொரு பாகத்தையும் ஒவ்வொரு இயக்குநர் இயக்கினால் தான் விரைவில் படமாக்க முடியும். இல்லையென்றால், ஒரு பாகத்தை முடித்த பிறகு தான் அடுத்த பாகத்தைத் தொடங்க முடியும். தற்போது எனது திட்டம், இந்தப் படத்தினை நானே தயாரிப்பதாகும்” என்று தெரிவித்துள்ளார் ஆமிர்கான்.