விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர் ஆரவ். தொடர்ந்து சரண் இயக்கிய மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ். படம் மூலம் கதாநாயகன் ஆனார். ஓ காதல் கண்மணி, சைத்தான் ஆகிய படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். அதன்பின் ராஜபீமா படத்தில் கதாநாயகனாக நடித்தார்.

கடைசியாக விடாமுயற்சி படத்தில் வில்லனாக ஆரவ் நடித்து கவனம் பெற்றார். தொடர்ந்து படங்களில் நடித்து வரும் இவர், புதிய தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “கடந்த பல ஆண்டுகளாக மக்கள் அளித்த அன்பும் அங்கீகாரமும் எனக்குப் பெரும் உற்சாகத்தையும் ஊக்கத்தையும் வழங்கியுள்ளது. இந்தப் பெருமைமிகு அழகான திரைப்பட உலகில் என்னை ஒரு பகுதியாக மாற்றியுள்ளது. இந்தப் பயணத்தை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்லும் நோக்கில் எனது திரைப்படத் தயாரிப்பு நிறுவனமான ஆரவ் ஸ்டூடியோஸின் துவக்கத்தைப் பணிவுடன் அறிவிப்பதில் பெருமை கொள்கிறேன்.
இதுவரை சொல்லப்படாத இயல்பான கதைகளை உருவாக்கும் நோக்கத்தோடு இந்த நிறுவனம் உருவாகியுள்ளது. கடவுளின் அருளுடனும், திரைப்பட ரசிகர்களின் அன்புடனும், இதயங்களைத் தொடும் சிறந்த படங்களைத் தொடர்ந்து உருவாக்கும் நம்பிக்கையுடன் எங்கள் ஆரவ் ஸ்டுடியோஸ் மூலம் இத்திரைப்படத் திரைப்பயணத்தைப் பெருமையுடன் தொடங்குகிறோம் என்று தெரிவித்துள்ளார்.

