நடிகர் ரவி மோகன், தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘ரவிமோகன் ஸ்டுடியோஸ்’ மூலமாக ‘ப்ரோ கோட்’ என்ற படத்தை தயாரித்து நடிக்கிறார்.இப்படத்தில் அவருடன் எஸ்.ஜே. சூர்யாவும் இணைந்து நடித்துள்ளார். இதன் அறிமுக வீடியோ சில வாரங்களுக்கு முன்பு வெளியானது, மேலும் அது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

இதற்கிடையில், டில்லியைச் சேர்ந்த மதுபான நிறுவனம் ‘எண்டோஸ்பிரிட் பிவரேஜ்’, ‘ப்ரோ கோட்’ என்ற பெயரில் பீர் தயாரித்து, அந்த பெயரில் ‘டிரேட்மார்க்’ பதிவு செய்துள்ளது என்று கூறி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதனை எதிர்த்து ரவி மோகன் தரப்பும் மனு தாக்கல் செய்தது. இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ரவி மோகனின் படத்திற்கு ‘ப்ரோ கோட்’ தலைப்பைப் பயன்படுத்த தடை இல்லை என உத்தரவிட்டது.
ஆனால், அதனை எதிர்த்து எண்டோஸ்பிரிட் நிறுவனம் டில்லி உயர்நீதிமன்றத்தை நாடியது.அங்கு நடைபெற்ற விசாரணையில், ரவிமோகன் ஸ்டுடியோஸ் நிறுவனம், ‘ப்ரோ கோட்’ என்ற தலைப்பை எந்த வடிவத்திலும் பயன்படுத்தவோ, வெளியிடவோ, விளம்பரப்படுத்தவோ கூடாது என டில்லி உயர்நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்தது. விசாரணையின் போது, சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியதைக் காட்டி ரவிமோகன் தரப்பு வாதிட்டது. ஆனால் நீதிமன்றம், ‘ப்ரோ கோட்’ என்ற பெயர், அந்த மது தயாரிப்பு நிறுவனத்துடன் வலுவாக தொடர்புடையது. அதே பெயரை படம் பயன்படுத்துவது நுகர்வோருக்கு தவறான எண்ணத்தை ஏற்படுத்தும் எனக் கூறி தடை உத்தரவை வழங்கியது. மேலும், ரவிமோகன் ஸ்டுடியோஸ் நிறுவனம் நான்கு வாரங்களுக்குள் விளக்கமளிக்க வேண்டும் என்றும், வழக்கு டிசம்பர் 23ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

