அருண் ராஜா காமராஜ் முதலில் நடிகராக ‘ராஜா ராணி’, ‘மான் கராத்தே’ போன்ற படங்களில் நடித்து மக்களிடையே பிரபலமானார். பின்னர் அவர் எழுத்தாளராகவும் பாடகராகவும் ‘நெருப்பு டா’, ‘வரலாம் வரலாம் வா’, ‘கொடி பறக்குதா’, ‘செம வெயிட்டு’ போன்ற பல ஹிட் பாடல்களை பாடினார். இயக்குநராக ‘கனா’, ‘நெஞ்சுக்கு நீதி’, ‘லேபிள்’ (வெப் தொடர்) போன்ற படங்களையும் இயக்கி உள்ளார்.

கடந்த ஆண்டு வேல்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பில், அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிக்கும் புதிய படம் குறித்து அறிவிப்பு வெளியானது. ஆனால் அதன் பிறகு படம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.
இந்நிலையில் சமீபத்தில் விஷ்ணு விஷால் அளித்த பேட்டியில், “அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் நான் நடிக்கும் படம் ஒரு வித்தியாசமான விளையாட்டு படம். இதற்கான முன் தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. டிசம்பர் அல்லது ஜனவரி மாதத்தில் இதன் படப்பிடிப்பு தொடங்கும்,” என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம், ‘கனா’ படத்திற்குப் பிறகு மீண்டும் அருண் ராஜா காமராஜ் ஸ்போர்ட்ஸ் பாணி கதைக்களம் கொண்ட திரைப்படம் ஒன்றை கையில் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

