மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள ‘பைசன்’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது, கபடி வீரரின் வாழ்க்கை வரலாறை மையமாகக் கொண்ட இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார்.

பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் அப்ளாஸ் எண்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தில் ரெஜிஷா விஜயன், பசுபதி, கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 2 மணி நேரம் 48 நிமிடங்கள் ரன் டைம் கொண்ட இப்படம் U/A சான்றிதழ் பெற்றது. வெளியான போஸ்டர், பாடல்கள், டிரெய்லர் ஆகியவை ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன.
இந்நிலையில் மாரி செல்வராஜ், பைசன் படத்தின் திரைக்கதை உண்மை சம்பவமில்லை என எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:பைசன் (காளமாடன்) எனது பால்யகால நாயகன் மணத்தி P. கணேசன் அவர்களின் வாழ்வையும், உழைப்பையும், கபடியையும், அவர் அடைந்த பெருவெற்றியையும் கருவாக வைத்து உருவாக்கப்பட்டிருந்தாலும், இப்படத்தின் திரைக்கதை பல தென்மாவட்ட இளைஞர்களின் வாழ்வும் கனவும் வலியும் சேர்க்கப்பட்ட ஒரு முழு புனைவு. கதாபாத்திரங்கள், பெயர்கள், சம்பவங்கள் எல்லாவற்றும் என் ஆன்மாவின் புனைவே; யாரையும் உண்மையாக காட்டவில்லை. பைசன் (காளமாடன்) நிச்சயம் ஒருவன் அல்ல; தென்மாவட்டத்தில் தன் இலக்கை நோக்கி பயணிக்கும் எண்ணற்ற இளைஞர்களின் சாயலை கொண்டவன் தான் என் காளமாடன்” என்று அவர் கூறியுள்ளார்.