இயக்குனர் மாரி செல்வராஜ் துருவ் விக்ரமை வைத்து இயக்கிய ‘பைசன் – காளமாடன்’ படம், பா.ரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் மற்றும் அப்ளாஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. அனுபமா பரமேஸ்வரன், லால், ரஜிஷா விஜயன், பசுபதி, கலையரசன் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படம், அர்ஜுனா விருது பெற்ற தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த கபடி வீரர் மனத்தி கணேசனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது. இன்று படம் திரையரங்குகளில் வெளியானது.

இந்தப் படத்தை பார்த்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தனது சமூக வலைதளத்தில், “பைசன் திரைப்படம் பார்த்தேன். மீண்டும் ஒரு முக்கியமான படைப்பைத் தந்திருக்கிறார் மாரி செல்வராஜ் சார். வன்முறை நிறைந்த வாழ்க்கைச் சூழலுக்கு மத்தியில், கபடி விளையாட்டில் சாதித்து அர்ஜுனா விருது பெற்ற கபடி வீரரின் வாழ்வை சிறப்பாக படமாக்கியுள்ளார்.
ஓர் இளைஞன், எல்லாவற்றுக்கும் மேலாக தன்னுடைய கபடி விளையாட்டின் மீது கொண்டுள்ள நம்பிக்கையும், அதுவே அவனை இலக்கை நோக்கி உயர்த்துவதையும் தனக்கே உரிய பாணியில் மாரி சார் கிராப்ட் செய்திருக்கிறார். படம் பேசுகிற அரசியலை உள்வாங்கி மிகச்சிறப்பாக நடித்திருக்கும் தம்பி துருவ் விக்ரம் உட்பட படத்தில் நடித்துள்ள அனைத்து கலைஞர்களுக்கும் என் வாழ்த்துகள். பைசன் – காளமாடன் வெல்லட்டும்!” என்று பதிவிட்டுள்ளார்.