1990களில் பிசியான இசை அமைப்பாளர் தேவா. 400க்கும் மேற்பட்ட படங்களுக்கு அவர் இசை அமைத்துள்ளார். சென்னையின் பாரம்பரிய இசையான கானா பாடல்களை சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் தேவா தான். தற்போது சில படங்களுக்கு இசை வருகிறார். இந்நிலையில் சமீபத்தில், அவரை பெருமைப்படுத்தும் வகையில் ஒரு பிரமாண்ட இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் ஆஸ்திரேலியாவில் உள்ள தமிழ் கலை மற்றும் பண்பாட்டு மையம் தேவாவை அழைத்து பாராட்டியது. இதில், குறிப்பாக ஆஸ்திரேலிய பார்லிமென்ட்டில் அவருக்கு மிகப்பெரிய கவுரவம் அளிக்கப்பட்டது. பார்லிமென்ட்டின் அவைத்தலைவர் இருக்கையில் அமர்ந்து தேவாவுக்கு செங்ககோலும் வழங்கப்பட்டது. இது அந்த நாட்டில் வழங்கப்படும் மிகப்பெரிய மரியாதையாகும்.
இதுகுறித்து தேவா கூறியபோது, “ஆஸ்திரேலிய தமிழ் கலை மற்றும் பண்பாட்டு மேம்பாட்டு மையம் எனக்கு அளித்த மரியாதை எனக்கு பெருமை அளிக்கிறது. எனக்கும் எனது இசைக்கலைஞர்கள் குழுவிற்கும் இவ்வளவு அரிய கவுரவத்தை வழங்கியதற்காக ஆஸ்திரேலிய அரசுக்கு என் மனமார்ந்த நன்றி. இந்த தருணம் எனக்கு மட்டும் அல்ல, உலகம் முழுவதும் இசை மற்றும் கலாச்சாரத்தை பரப்பும் ஒவ்வொரு கலைஞருக்கும் சொந்தமானது. எனது 36 ஆண்டுகால இசைப் பயணத்தில் ரசிகர்களின் அன்பும் ஆதரவும் தான் எனது பலம். இந்த அங்கீகாரத்தை உங்கள் அனைவருக்கும் சமர்ப்பிக்கிறேன்” என்றார்.