கடந்த ஏப்ரல் மாதத்தில் மலையாளத்தில் மோகன்லால், ஷோபனா நடித்த ‘தொடரும்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று, ரூ.200 கோடி வசூல் கிளப்பில் இணைந்தது. இந்த படத்தை இயக்குநர் தருண் மூர்த்தி இயக்கியிருந்தார். இவர் அதற்கு முன்பு ‘சவுதி வெள்ளக்கா’ மற்றும் ‘ஆபரேஷன் ஜாவா’ போன்ற குறைந்த பட்ஜெட் படங்களை இயக்கியிருந்த நிலையில், ‘தொடரும்’ படத்தை முழுக்க முழுக்க ஆக்ஷன் படமாக உருவாக்கியிருந்தார். இதற்குப் பிறகு, அவர் தமிழில் நடிகர் கார்த்தியை வைத்து ஒரு படத்தை இயக்கப் போகிறார் என்ற தகவல் பரவியது.

இந்நிலையில், தனது அடுத்த திட்டம் குறித்து பேசிய தருண் மூர்த்தி, தற்போது தனது புதிய படத்திற்கான பணிகளில் ஈடுபட்டிருப்பதாகவும், அது தன்னுடைய முந்தைய படத்தின் இரண்டாம் பாகத்திற்கான திரைக்கதை என்றும் தெரிவித்துள்ளார்.
“இந்த ஓணம் பண்டிகையன்று நான் இந்த புதிய படத்தின் ஸ்கிரிப்ட் பணிகளைத் தொடங்கிவிட்டேன். என் வாழ்க்கையில் நடந்த சில தனிப்பட்ட சந்திப்புகளையும், நிஜ வாழ்க்கை சம்பவங்களையும் மையமாகக் கொண்டு இந்தக் கதையை உருவாக்குகிறேன்” என்று அவர் கூறியுள்ளார். எனினும், இது எந்த படத்திற்கான இரண்டாம் பாகம் என்பதை சஸ்பென்ஸாக வைத்துள்ளார். இதனால், ரசிகர்கள் அனைவரும் இது ‘தொடரும்’ படத்தின் இரண்டாம் பாகமா அல்லது அவர் முன்பு சைபர் குற்றத்தை மையமாகக் கொண்டு இயக்கிய ‘ஆபரேஷன் ஜாவா’ படத்தின் இரண்டாம் பாகமா என தங்களது எதிர்பார்ப்புகளை மாறிமாறி வெளிப்படுத்தி வருகின்றனர்.