இந்திய சினிமாவின் பிரபல நடிகைகளில் ஒருவரான மிருணாள் தாகூர், பாலிவுட் திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்ததன் மூலம் பெரும் வரவேற்பைப் பெற்றவர். பின்னர், இவர், ‘சீதாராமம்’ படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமானார். அந்தப் படத்தில் சீதாவாக நடித்த மிருணாள், ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தைப் பெற்றார். இந்தப் படத்துக்குப் பிறகு, ‘பேமிலி ஸ்டார்’, ‘ஹாய் நன்னா’ போன்ற வெற்றிப்படங்களில் நடித்துள்ளார்.

தற்போது, அதிவி சேஷ் கதாநாயகனாக நடித்துவரும் ‘டகோயிட்’ என்ற படத்தில் மிருணாள் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதற்கிடையே, அஜய் தேவ்கனுடன் ‘சன் ஆப் சர்தார் 2’ படத்திலும் நடித்துள்ளார். இந்தப் படம் ஆகஸ்ட் 1ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
இதனை முன்னிட்டு பிரமாண்டமான ப்ரோமோஷன் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிகழ்வின் ஒரு கட்டமாக, தனது திருமண கனவுகளைப் பற்றிய தகவல்களை மிருணாள் ரசிகர்களுடன் பகிர்ந்துகொண்டார். சிறுவயதிலிருந்து திருமணம் செய்து கொண்டு, தாயாக மாற வேண்டும் என்பது தனது கனவாக இருந்ததைக் கூறிய அவர், தற்போது திரைத்துறையில் தான் தனது முழு கவனமும் செலுத்துகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.