சசிகுமார் நடிப்பில் வெளியான ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ மிகப்பெரிய வரவேற்பையும் வசூலையும் பெற்றது. அதற்கு பிறகு, அவர் நடித்துள்ள ‘பிரீடம்’ திரைப்படம் ஜூலை 10ம் தேதி வெளியாகவுள்ளது. இந்தப் படத்தை சத்யசிவா இயக்கியுள்ளார். ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தைப்போல் இலங்கை தமிழர்களின் பின்னணியை மையமாக கொண்டிருந்தாலும், இது முற்றிலும் வேறுபட்ட கதைக்களத்துடன், உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவாகியுள்ளது.

இப்படத்தின் ப்ரமோஷன் நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய சசிகுமார், இலங்கை தமிழர்கள் தொடர்பான படங்களில் நடிப்பதால், சிலர் என்னை இலங்கை தமிழருக்கு ஆதரவாளரா எனக் கேட்கிறார்கள். ஆனால் நான் மொத்தத்தில் தமிழருக்கு ஆதரவாளன். உண்மையில் ‘டூரிஸ்ட் பேமிலி’ படத்துக்கு முன்பே ‘பிரீடம்’ படத்தை தொடங்கினோம் விரைவில் முடித்து வெளியிட திட்டமிட்டு இருந்தோம். சில காரணங்களால் அது தாமதமாகி இப்போது வெளியாகிறது. இந்தப் படம் இலங்கைத் தமிழர்களை மையமாக கொண்டதாக இருந்தாலும், இது முற்றிலும் வேறுபட்டது. இது சிறையிலிருந்து விடுபட போராட்டத்தை நடத்திய கைதிகளின் உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டது என்றார்.
மேலும், ‘டூரிஸ்ட் பேமிலி’ படம் பார்த்து அது போலவே இருக்கும் என எதிர்பார்த்துப் படம் பார்க்க வரவேண்டாம். பொதுவாகவே, ஒரு படம் வெளியாகும் முன்பு அதன் ஜானர் என்ன என்பதைத் தெளிவாகக் கூறி விட வேண்டும். இல்லையென்றால் ரசிகர்கள் தாங்கள் எதிர்பார்த்து வந்த ஒன்று அந்த படம் பார்க்கும்போது இல்லை என்றால் அது ஏமாற்றத்தை ஏற்படுத்தும். இது நேர்ந்தால், அந்தப் படத்தின் வெற்றிக்கும் பாதிப்பாகலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.