மலையாளத்தில் 2013 மற்றும் 2021ஆம் ஆண்டுகளில் வெளியான ‘திரிஷ்யம்’ மற்றும் அதன் தொடர்ச்சி படம், மிகப்பெரிய வெற்றிகளை பெற்றதுடன், இந்த வெற்றியை தொடர்ந்து தென்னிந்திய மொழிகளிலும், பாலிவுட்டிலும் இப்படங்கள் ரீமேக் செய்யப்பட்டு அங்கு சிறந்த வரவேற்பைப் பெற்றன. இயக்குநர் ஜீத்து ஜோசப்பும், நடிகர் மோகன்லாலும் இணைந்து உருவாக்கிய இந்த இரண்டு பாகங்களுக்குப் பிறகு, தற்போது இப்படத்தின் மூன்றாம் பாகம் உருவாக இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த புதிய பாகம் மலையாளத்தில் எப்போது தொடங்கும் என்பது தெரியாமல் இருந்தபோது, இந்த படத்தின் ஹிந்தி ரீமேக்கில் கதாநாயகனாக நடித்த அஜய் தேவ்கன், மூன்றாம் பாகத்தை உடனடியாகத் தொடங்க ஆர்வம் காட்டினார். அதன்படி, படம் அக்டோபர் 2ம் தேதி படப்பிடிப்புடன் தொடங்கி, அடுத்த ஆண்டு அதே தேதியான காந்தி ஜெயந்தி நாளன்று வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் தெலுங்கு ரீமேக் எப்போது தொடங்கும், எப்போது ரிலீஸ் ஆகும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே உருவாகியுள்ளது.
இதுகுறித்து இயக்குநர் ஜீத்து ஜோசப் கூறும்போது, “முந்தைய இரண்டு பாகங்களின் கதை ரசிகர்களுக்குப் பரிச்சயமானதாகிவிட்டதால், ‘திரிஷ்யம் 3’ படத்தை மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் ஒரே நேரத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளோம். ஏதாவது ஒரு மொழியில் தாமதமானால், கதையின் திருப்பங்கள் மற்ற மொழிகளுக்குத் தெரிய வாய்ப்புண்டு. அதனால் ஒரே தேதி ரிலீஸ் முக்கியமானது. ஆனால், படப்பிடிப்பு வெவ்வேறு நேரங்களில் துவங்கும்” என விளக்கினார்.